துபாயை பொறுத்தவரை பொது போக்குவரத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் இலட்சக்கணக்கில் மக்கள் துபாயின் பல்வேறு பொது போக்குவரத்து விருப்பங்களை பயன்படுத்தி வரும் நிலையில், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எச்சரிக்கை செய்தி ஒன்றை சமீபத்தில் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பொதுப் பகுதிகளில் போலி QR குறியீடுகளை மக்கள் ஸ்கேன் செய்வது தகவல் திருட்டு (data theft) மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கடுமையான அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்றும், சீரற்ற QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ QR குறியீடுகள் பற்றி கவனமாக இருக்கவும் RTA பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உண்மையான QR குறியீடுகளைக் கண்டறிய பயணிகளுக்கு சில வழிகாட்டுதல்களையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. அவற்றை கீழே காணலாம்.
- QR குறியீடானது ஸ்டிக்கர்கள் போல் அல்லது மேலடுக்குகளில் தனியாக ஒட்டப்பட்டுள்ளதா என எச்சரிக்கையாக இருக்கவும்.
- சந்தேகத்திற்கிடமான URL கள், எழுத்துப்பிழைகள் அல்லது தேவையற்ற தனிப்பட்ட தகவல்களைக் கோரும் வலைத்தளங்களுக்கு வழிவகுக்கும் குறியீடுகளை ஸ்கேன் செய்வதைத் தவிர்க்கவும்.
- QR குறியீடுகளுடன் ‘new systems’ அல்லது புதுப்பிக்கப்பட்ட சேவைகளை (updated services) அறிமுகப்படுத்துவதாகக் கூறும் செய்திகள் அல்லது மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.
மேற்கூறிய வழிக்கட்டுதல்களின் படி, சாத்தியமான மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு மக்களை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel