அபுதாபி நோக்கிச் செல்லும் அல் மக்தூம் விமான நிலைய ரவுண்டானா அருகே ஷேக் முகமது பின் சையத் சாலையில் இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சோர்வாகவோ அல்லது தூக்கத்திலோ வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளது.
லாரி ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஓட்டுநர் தூங்கியதால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த மற்றொரு லாரி மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவசரகால குழுக்களும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்புப் பிரிவுகள் சம்பவ இடத்தை விரைவாக அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் அதிகாரிகள் வாகனங்களை மாற்று வழிகளில் திருப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தை போக்குவரத்து நிபுணர்கள் ஆய்வு செய்ததாகவும், அதே நேரத்தில் ரோந்துப் பணியாளர்கள் வாகனங்களின் ஓட்டத்தை நிர்வகித்து, சேதமடைந்த வாகனத்தை சாலையில் இருந்து அகற்றவும், இயல்பான போக்குவரத்து நிலைமைகளை விரைவில் மீட்டெடுக்கவும் மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலீம் பின் சுவைதான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அமீரக சாலைகளில் சோர்வு தொடர்பான விபத்துகள் மிகவும் ஆபத்தானவை என்றும், சிறிய தவறுகள் கூட ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
சாலையில் வாகனம் ஓட்டுவதற்கு முன் ஓட்டுநர்கள் போதுமான ஓய்வு எடுப்பதன் முக்கியத்துவத்தை துபாய் காவல்துறை வலியுறுத்தியது. அதன்படி:
- சோர்வாக உணர்ந்தால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
- மாறிவரும் சாலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
- தங்கள் பாதைகளிலேயே செல்லவும்.
- தூக்கம் வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்துங்கள்.
சாலை பாதுகாப்பு என்பது வாகனம் ஓட்டும்போது அவர்களின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்பைப் பொறுத்தது என்பதை அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel