கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து குவைத் போராடி வரும் நிலையில், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று குவைத் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகம் பொதுஇடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 5,000 தினார் (12 இலட்சம் ரூபாய்) அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இந்த அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குவைத் நாடானது சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் அதிகரிப்பை கண்டுள்ளது. இதனை முன்னிட்டு, குவைத் அரசாங்கம் மே 30 வரை நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்திருக்கிறது. இதுவரையிலும் குவைத் நாட்டில் 15,691 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.