இந்திய செய்திகள்

13 நாடுகள்.. 64 விமானங்கள்.. 14,000 பேர்.. முதல் வாரத்திற்கான இந்தியாவின் மெகா திட்டம்..!!

சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக இந்தியாவானது கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான மாபெரும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியாவிற்கு சொந்தமான விமான நிறுவனத்தின் விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த பயண நடவடிக்கையானது முதல் கட்டமாக இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து வர மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் முதல் வாரத்தில் 64 விமானங்கள் மூலம் 13 வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஒரு விளக்கப்படத்தை வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs,MEA) தயாரித்துள்ளது.

மே 7 முதல் தொடங்கவுள்ள இந்த நடவடிக்கையானது, இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் (MoCA) பகிரப்பட்ட MEA திட்டத்தின் படி, 13 வெவ்வேறு நாடுகளில் இருந்து தோராயமாக 14,800 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து விமானங்கள் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும் முதல் நாளில் 10 விமானங்கள் 2,300 இந்தியர்களை அழைத்து வரும்.

2 ஆம் நாள், சுமார் 2,050 இந்திய குடிமக்கள் 9 நாடுகளிலிருந்து சென்னை, கொச்சி, மும்பை, அகமதாபாத், பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு திட்டமிட்டபடி அழைத்து வரப்படுவார்கள்.

இதேபோல் 3 ஆம் நாள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற 13 நாடுகளில் இருந்து சுமார் 2,050 இந்தியர்கள் மும்பை, கொச்சி, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் 4 வது நாளில், விமான போக்குவரத்து அமைச்சகம், MEA உடன் இணைந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட எட்டு நாடுகளில் இருந்து 1,850 இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து வரப்படும்.

இந்த சிறப்பு விமானங்களில் பயணிகள் ஏறுவதற்கு முன்பு, இந்தியாவிற்கு வரும் அனைத்து நபர்களும் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அதன் நகல்களை சுகாதார மற்றும் இமிகிரேஷன் கவுண்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பயணிகள் காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அவர்கள் அந்த படிவத்தில் குறிப்பிட வேண்டும். இந்த படிவம் கொரோனா பாவத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் நாட்டிற்கு திரும்பி வரும் பயணிகளுக்கு வழங்கப்பட்ட படிவத்தை போன்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டுதல்கள் படி, விமானங்களில் பயணிக்க இருக்கும் அனைத்து பயணிகளும் அவர்கள் விமானங்களில் ஏற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கொரோனாவிற்கான மருத்துவ ஸ்க்ரீனிங் செய்யப்படுவார்கள் என்றும், அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பயணத்தின் போது, ​​அவர்கள் சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் இந்த திட்டமானது 1990ல் வளைகுடா போரின் காரணமாக குவைத்திலிருந்து 170,000 பேரை இந்தியாவிற்கு அழைத்து வந்ததிற்கு பிறகான மெகா திட்டமாகும். இதே போல் கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமனில் ஏற்பட்ட போரின் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!