ADVERTISEMENT

கத்தார்: நாளை முதல் தொழில்துறை பகுதிகளுக்குள் நுழைய, வெளியேற அனுமதி தேவை இல்லை..!! அரசு அறிவிப்பு..!!

Published: 14 Jun 2020, 6:21 PM |
Updated: 14 Jun 2020, 6:25 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் கொரோனா பாதிப்புகளினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நாளை (ஜூன் 15) திங்கள்கிழமை முதல் தளர்த்துவதற்கு அரசு தயாராகி வருவதால், தொழில்துறை பகுதிக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த நுழைவு அனுமதி முறையை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கத்தார் நாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அனுமதி முறையை நீக்கினாலும் தொழில்துறை பகுதிக்குள் முகக்கவசம் அணிந்தவர்கள், பேருந்துகளில் இருக்கையின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு பயணிகள் பயணிப்பது, எஹ்தெராஸ் அப்ளிகேஷனில் (Ehteraz application) கிரீன் எனும் சுகாதார நிலையில் (Green Health Status) உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் காவல்துறையின் சோதனைச் சாவடிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை பகுதிகளில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களிடையே பல கொரோனா வைரஸ் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தொழில்துறை பகுதிகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை செய்யப்பட்ட காலத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பரிசோதிக்கப்பட்டு சுமார் 6,500 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு மாற்றப்பட்டனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு, கத்தார் அரசால் இலவசமாக உயர்தர சுகாதார பராமரிப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தொழில்துறை பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, நுழைவு மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கத்தார் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதை உறுதிசெய்ய மற்றும் சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்ப, அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.