ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமீரக அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்பாலான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அனைத்து நாட்டினரும் புதிய சுற்றுலா விசா பெற்று அமீரகம் வரலாம் என அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அமீரக அரசின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து இந்திய அரசாங்கமும், இந்திய நாட்டவர்கள் சுற்றுலா விசாவில் அமீரகம் செல்ல அனுமதி வழங்கி வருகிறது.
இரு நாடுகளின் ஒப்புதலுடன் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே ஏர் பபுள் (Air Bubble) ஒப்பந்தத்தின் மூலம் இயக்கப்பட்டுவரும் சிறப்பு விமானங்களில் டூரிஸ்ட் விசா பெற்றவர்களும் அமீரகம் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு பயணிகள் டூரிஸ்ட் விசாவில் அமீரகம் வருவதற்கு ஒரு புதிய விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
அமீரக அரசின் தற்போதைய விதிமுறையின்படி, டூரிஸ்ட் விசாவில் அமீரகம் பயணிக்க, பயணிகளின் பாஸ்ப்போர்ட்டின் செல்லுபடிக்காலம் (Passport Validity) குறைந்தது ஆறு மாதங்கள் இருக்க வேண்டும் எனவும், மேலும் இந்த ஆறு மாத கால செல்லுபடிக்காலம், பயணிகள் அமீரகம் வந்திறங்கும் நாளிலிருந்து கணக்கில்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூரிஸ்ட் விசாவில் அமீரகம் வரும் பயணிகளுக்கு ஹெல்த் கவரேஜுடன் கூடிய டிராவல் இன்சூரன்ஸ் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து அமீரகத்தின் சர்வதேச விமான நிலையங்களான அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு வெளிநாட்டு பயணிகள் டூரிஸ்ட் விசாக்களில் பயணிக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரத்திலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு டூரிஸ்ட் விசாவில் வர தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பயணிகள் டூரிஸ்ட் விசாவில் துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு வருவதில் எந்த தடையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.