ADVERTISEMENT

ஓமான்: “கள மருத்துவமனையின்” முதல் பகுதி இந்த மாதம் திறக்கப்படும்.. 60 வயதிற்கு மேலானவர்கள் வணிக வளாகங்கள் செல்லலாம்..!! சுகாதார அமைச்சர் தகவல்..!!

Published: 4 Sep 2020, 11:39 AM |
Updated: 4 Sep 2020, 11:39 AM |
Posted By: admin

ஓமான் நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் “கள மருத்துவமனையின்” முதல் பகுதி இந்த மாதம் திறக்கப்படும் என்று ஓமானின் சுகாதார அமைச்சரும் உச்சக் குழு உறுப்பினருமான டாக்டர் அகமது அல் சைடி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஓமான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஊடகளாவியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் டாக்டர் அகமது அல் சைடி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத அல்லது தங்கள் வளாகத்திற்குள் நுழைவோரின் வெப்பநிலையை அளவிடாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதனுடன் “முகக்கவசம் அணிந்துகொள்வதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து அவர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்ததாக பதிவாகியுள்ள வழக்குகளில் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதவர்கள் என்றும், வீட்டிற்கு வந்த உறவினர்களின் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் “மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் கவலை அளிக்கிறது, எனினும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனுடன் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் வணிக வளாகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஊடகளாவியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது அல் சைடி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT