குவைத் நாட்டில் வசிக்கும் இந்தியர்களில் பயணம் செய்வதற்கு செல்லுபடியாகும் ஆவணங்கள் வைத்திருக்காதவர்களுக்கு உதவும் விதமாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் ரிஜிஸ்ட்ரேஷன் டிரைவ் (Registration Drive) எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த புதிய முயற்சியின் வாயிலாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தேவையான செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது செல்லுபடியாகும் அவசர சான்றிதழ் இல்லாத இந்தியர்கள், தற்பொழுது குவைத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மூலம் எமெர்ஜென்சி செர்டிபிகேட் (Emergency Certificates) எனப்படும் அவசர சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த சான்றிதழை பெற விரும்புபவர்கள் தூதரகம் அறிவித்துள்ள https//docs.google.com/forms என்ற லிங்கில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அல்லது விண்ணப்ப படிவத்தை நிரப்பி தூதரகத்திலோ அல்லது ஷார்க், ஜ்லீப் அல் ஷுவைக், ஃபஹாஹீல் ஆகிய இடங்களில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகங்களிலோ சமர்ப்பிக்கலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிதாக வழங்கப்படும் அவசர சான்றிதழின் எண் அல்லது பாஸ்போர்ட் எண், ரிஜிஸ்ட்ரேஷன் டிரைவ் எனும் இந்த புதிய முயற்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் மேலும் இது குறித்த சந்தேகளுக்கு community.kuwait@mea.gov.in. எனும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் அவசர சான்றிதழை பெற ரிஜிஸ்ட்ரேஷன் டிரைவ் மூலம் விண்ணப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் இல்லை எனவும், எனினும் பயண ஆவணங்கள் வழங்குவதற்கு கட்டணம் தூதரகத்தில் நேரடியாக வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.