ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருவது அமீரகத்தில் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதற்கு மத்தியில், அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, விரைவான மற்றும் துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடிய சிறிய அளவிலான புதிய ஒரு கோவிட்-19 பரிசோதனை கருவியை உருவாக்கியுள்ளனர்.
ஆராச்சியாளர்கள் உருவாகியுள்ள புதிய சோதனை கிட், அளவில் ஒரு ஸ்மார்ட்போன் போன்றது என்றும், இதில் PCR அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், மற்றும் சோதனை மேற்கொண்டதிலிருந்து 45 நிமிடங்களுக்குள் தொற்று பாதிப்பு குறித்து துல்லியமான முடிவுகளை இந்த புதிய சோதனை கிட் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புதிய கருவியின் மூலம் குறைந்த செலவில் விரைவான மற்றும் குறிப்பிட்ட கோவிட் -19 வைரஸ் தொற்றை கண்டறிய முடியும் என்றும், முதற்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கலீஃபா பல்கலைக்கழகத்தின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ஆரிஃப் சுல்தான் அல் ஹம்மடி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க கலீஃபா பல்கலைக்கழகம் ஒரு பிரத்தியேக அறிவியல் ஆராய்ச்சி முயற்சியை நிறுவியுள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சோதனை கருவி உட்பட மொத்தம் 14 ஆராய்ச்சி திட்டங்களுக்கு இந்த முயற்சியின் மூலம் நிதியளித்துள்ளது. குறுகிய காலத்திற்குள் எங்கள் ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறிய மற்றும் விரைவான முடிவுகளை வழங்கக்கூடிய புதிய கோவிட் -19 சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் தொற்றுநோய் பாதிப்புகளை கண்டறிய முடியும். தற்போது நாங்கள் மூக்கிலிருந்து பெறப்பட்ட மாதிரியை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விரைவில் உமிழ்நீர் மாதிரிகளை வைத்தும் சோதனையை மேற்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
கலீஃபா பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மைக்ரோஃப்ளூயடிக்ஸ் ஆய்வகத்தின் நிறுவனர் அனஸ் அல் ஆசாம் கூறுகையில், “புதிய சோதனை கிட் தற்போது மருத்துவ சரிபார்ப்பு கட்டத்தில் உள்ளது. இந்த சோதனை கிட் 45 நிமிடங்களுக்குள் செயலில் தொற்றுநோயைக் கண்டறிய உதவும். அதாவது முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய ஊழியர்களுக்கு மேற்கொள்ளவேண்டிய விரைவான பரிசோதனையில் இதை பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.
“எங்கள் புதிய கருவியை பயன்படுத்தும் போது கோவிட் -19 சோதனையின் முடிவுகளை தெரிந்துகொள்ள நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருக்கத் தேவையில்லை. அடிப்படையில், இது இரண்டு வண்ணங்களில் முடிவுகளை தருகிறது: மஞ்சள் நிறம் என்றால் நேர்மறை மற்றும் சிவப்பு நிறம் என்றால் எதிர்மறை என்று பொருள். இந்த கருவியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காணலாம். மேலும் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்கவும் இந்த புதிய கருவி உதவும்” என்று கலீஃபா பல்கலைக்கழக பயோடெக்னாலஜி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஹபீபா அல் சஃபரும் கூறியுள்ளார்.