ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அளிக்கும் வகையில் எமிராட்டி பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடிக்கான புதிய வடிவமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மிகவும் பாதுகாப்பான பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டிருப்பார்கள் என்றும், புதிய டிசைன்களில் வரவிற்கும் பாஸ்போர்ட் மற்றும் எமிரேஸ் ஐடிகளில் கூடுதலாக டிஜிட்டல் குறியீடுகள் (digital codes) பாதுகாப்பு அம்சங்களை மேலும் உறுதிப்படுத்த சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எமிரேட்டி பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளின் புதிய டிசைன்களுக்கான ஒப்புதலை அபுதாபியில் உள்ள கஸ்ர் அல் வத்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்படவிருக்கும் பாஸ்போர்ட் மற்றும் ஐடிகளில் இருக்கும் டிஜிட்டல் குறியீடுகள் (digital codes), மிக உயர்ந்த சர்வதேச பாதுகாப்பு தரங்களைக் கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட்களில் என்க்ரிப்ட் செய்யப்பட்டு வைத்திருக்கும் குறியீடுகள் (encrypted codes) மக்கள் பயணிக்கும்போது பாஸ்போர்ட்களை சரிபார்க்க உதவும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுகின்றன மற்றும் இந்த வகை டிஜிட்டல் மேம்படுத்தலை செயல்படுத்தும் முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நாட்டில் இணைய பாதுகாப்புக்கான (cybersecurity) ஒரு கவுன்சிலை நிறுவவும் மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். அத்துடன், நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த நாட்டின் தியாகிகளுக்கும் அவர் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.