ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக பல நாடுகள் UK-உடனான சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. அதிலும் குறிப்பாக சவூதி அரேபியா நாடானது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒரு வாரம் தடை விதித்துள்ளது. அத்துடன் மற்ற நாடுகளுடனான தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சேவைக்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவிற்கு அடுத்த படியாக வளைகுடா நாடுகளில் மற்றுமொரு நாடான ஓமான் புதிய வகை கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கையாக தனது தரை, கடல் மற்றும் வான் வழி போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது. இருப்பினும் சரக்கு விமானங்கள், கப்பல்கள் மற்றும் லாரிகளுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமான் அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பானது நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் இத்தடையானது ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் விதித்து வரும் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் புதிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓமானில் கடந்த மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையானது அக்டோபர் மாதத்தில் இருந்தே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.