துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு ஆய்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது, பொது போக்குவரத்து முறைகளில் 3,000 க்கும் அதிகமான விதிமீறல்களைக் கண்டறிந்துள்ளது.
துபாயில் பொது போக்குவரத்தின் விதிகளை பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் முடிவில் 3,300 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்து நிறுவனம் (RTA) பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் கண்காணிப்பு இயக்குநர் சயீத் அல் பலூச்சி அவர்கள் இந்த குற்றங்களை பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி 1,459 குற்றங்கள் பேருந்தில் பயணம் செய்பவர்கள் புரிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை கட்டணம் செலுத்தாதமால் பேருந்தில் பயணிப்பதாகும்.
1,412 குற்றங்கள் டாக்ஸி ஓட்டுனர்கள் புரிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை பயணிக்க அனுமதிப்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடகை பேருந்துகளில் (rented buses) 105 குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் சட்டவிரோதமாக பயணிகளை கொண்டு செல்வது தொடர்பான 100 மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 96 குற்றங்கள் லிமோசின் ஓட்டுனர்கள் (limo drivers) புரிந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.
மீதமுள்ள குற்றங்கள் பள்ளி பேருந்துகள், ஆப்ராஸ் (Abras) மற்றும் நோல் கார்டுகளின் (nol cards) பயன்பாடு தொடர்பானவை என்று அல் பலூச்சி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆய்வு பிரச்சாரமானது, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுடன் போக்குவரத்து வழிமுறைகளை பின்பற்றுவது போன்ற ஆண்டு முழுவதுமான திட்டங்களின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.