ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவலின் போது கூட எட்டாத பாதிப்புகளின் எண்ணிக்கையை தற்பொழுது அமீரகம் தினமும் பதிவு செய்து வருகிறது. புத்தாண்டு ஆரம்பித்த ஒரு சில நாட்களில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பானது கடந்த ஒரு வாரமாக 2,000 க்கும் அதிகமாகவே இருக்கின்றது.
இந்நிலையில், இன்று உச்சகட்டமாக இதுவரை இல்லாத அளவிற்கு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே 3,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12, 2021) புதிதாக 3,243 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 236,225 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 2,195 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 210,561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து தற்பொழுது வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், அமீரகத்தில் வசிக்கும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ளுமாறு ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் வலியுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Covid-19: தடுப்பூசியினை விரைவில் போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்ட அமீரக தலைவர்கள்..!!