கொரோனா பாதிப்பினால் விதிக்கப்பட்ட சர்வதேச பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்ய முடியாத சூழல் உருவாகியது. அதில் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்திருந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கள் நாடுகளிலேயே சிக்கி தவித்த நபர்களும் உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, அமீரக அரசானது ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே இருந்த ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களும் அமீரகம் திரும்பலாம் என அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த நடைமுறையானது மார்ச் 31 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனவரி 4 ஆம் தேதி துபாயின் பட்ஜெட் கேரியர் நிறுவனமான ஃப்ளைதுபாயின் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பயண நடைமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து 180 நாட்களுக்கும் மேல் அமீரகத்தை விட்டு வெளியே தங்கியிருந்தால், மார்ச் 31 ம் தேதி வரை அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல், இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “துபாய் ரெசிடென்ஸ் விசாவினை வைத்திருந்து அமீரகத்தை விட்டு வெளிநாடுகளில் 180 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள பயணிகள் 2021 மார்ச் 31 க்குள் திரும்பலாம்” என தெரிவித்துள்ளது.
6 மாதத்திற்கு மேல் அமீரகத்தை விட்டு வெளியே இருந்து தற்சமயம் அமீரகத்திற்கு திரும்புபவர்கள் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா மற்றும் GDRFA வின் ஒப்புதல் பெற்றிருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பானது பல மாதங்களாக தங்கள் சொந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் பல ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.