ஓமானில் வரவிருக்கக்கூடிய ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஓமானில் வரும் ஜூலை 16 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 31 சனி வரை மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை அனைத்து வணிக நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஈத் அல் அத்ஹாவின் போது (துல் ஹஜ் 10 முதல் 12 வரை) இந்த கட்டுப்பாடுகள் நாள் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈத் அல் அத்ஹா தொழுகை, பாரம்பரிய முன் ஈத் சூக்குகள் (ஹப்தா) மற்றும் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது. இதில் குடும்பமாக ஒன்று கூடுதல், ஈத் வாழ்த்து கூட்டங்கள் மற்றும் கூட்டமான கொண்டாட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இருப்பினும் முசந்தம் கவர்னரேட்டில் நோய்ததொற்று குறைவாக இருப்பதால் வணிக நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாது என கூறப்பட்டுள்ளது.
நாட்டில் (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்த குடியிருப்பாளர்களுக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த பயணிகளுக்கும் மட்டும் இந்த பகுதியில் நுழைய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ஜூலை 9 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் மேலதிக அறிவிப்பு வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.