ADVERTISEMENT

அமீரகத்தை அடுத்து பாரம்பரிய இந்து கோவில் கட்டப்படவிருக்கும் அடுத்த வளைகுடா நாடு..!!

Published: 2 Feb 2022, 7:15 PM |
Updated: 2 Feb 2022, 8:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் முதல் பாரம்பரிய இந்து கோவிலான BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் மற்றொரு கோவிலை கட்டும் இரண்டாவது நாடாக பஹ்ரைன் மாறியுள்ளது.

ADVERTISEMENT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பஹ்ரைனின் பட்டத்து இளவரசரும், துணை உச்ச தளபதியும், பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவிடம் உரையாற்றிய பிறகு இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றிய அறிவிப்பில், “பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமரான மாண்புமிகு இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுடன், அன்பான உரையாடலை நடத்தினேன். சுவாமிநாராயண் கோவிலுக்கு நிலம் ஒதுக்கீடு தொடர்பான சமீபத்திய முடிவு உட்பட, இந்திய சமூகத்தின் தேவைகளை நாடு கவனத்தில் கொள்வதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் மதத் தலைவர் பிரம்மவிஹாரி சுவாமி, கடந்த சில ஆண்டுகளாக பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவையும், இளவரசர் சல்மானையும் பலமுறை சந்தித்துள்ளார். அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் தலைவர் அசோக் கோடேச்சா, இத்தகைய வரலாற்று முடிவை எடுத்ததற்காக பஹ்ரைன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் தலைமைக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் “பஹ்ரைனில் நல்லிணக்கம், அமைதி மற்றும் சேவைக்கான இடத்தை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்க்கிறோம்.” என்றும் கூறியுள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் பாரம்பரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் அபுதாபியில் நடந்து வருவதாகவும், அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கோடெச்சா மேலும் கூறியுள்ளார்.

கோவிலின் உள்ளே கோவிலில் பயன்படுத்தப்படும் கையால் செதுக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணற்கற்கள் இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கின்றன மற்றும் இது அரபு சின்னங்களை உள்ளடக்கியுள்ளது. கோவிலில் ஏழு கோபுரங்களும் ஐந்து குவிமாடங்களும் இருக்கும். மேலும் குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகள் இந்த கோவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளாகத்தில் பார்வையாளர் மையம், பிரார்த்தனை கூடங்கள், நூலகம், வகுப்பறை, சமூக மையம், மஜ்லிஸ், ஆம்பிதியேட்டர், விளையாட்டுப் பகுதிகள், தோட்டங்கள், புத்தகங்கள் மற்றும் பரிசுக் கடைகள், உணவு அரங்கம் மற்றும் பிற வசதிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.