ஓமானில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையத்தின் (NCSI) புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஓமானில் வெளிநாட்டினரின் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர், 2021 இல், ஓமானில் 1.63 மில்லியன் வெளிநாட்டவர்கள் இருந்துள்ளனர். இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1.68 மில்லியனாகவும் செப்டம்பர் மாதத்தில் 1.64 மில்லியனாகவும் இருந்து அக்டோபரில் குறைந்து கொண்டு வந்துள்ளது.
பின்னர், அக்டோபரில் இருந்து, நாட்டின் வெளிநாட்டு மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெளிநாட்டினரின் மக்கள் தொகை அக்டோபரில் 1.63 மில்லியனிலிருந்து 2021 நவம்பரில் 1.65 மில்லியனாக உயர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் 1.68 மில்லியனாக உயர்ந்தது.
புத்தாண்டின் தொடக்கத்தில், ஓமானின் வெளிநாட்டினரில் மக்கள் தொகை 1.7 மில்லியனைத் தாண்டி 1,729,965 ஆக இருந்ததுடன் பிப்ரவரி 1 அன்று 1,753,264 ஆக உயர்ந்துள்ளது.
இதனையொட்டி அக்டோபர் 1, 2021 முதல், நாட்டின் மொத்த மக்கள் தொகை 4.4 மில்லியனில் இருந்து 4.5 மில்லியனாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதில் ஓமான் நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 2,784,799 இலிருந்து 2,809,731 ஆக அதிகரித்துள்ளது.
ஜனவரி 2022க்கான NCSIயின் மாதாந்திர புள்ளிவிவரங்களின் படி, 2021 டிசம்பரில் நாட்டின் தனியார் துறையில் 1.131 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிந்துள்ளனர். இது 2021 ம் ஆண்டு நவம்பரில் 1.108 மில்லியனாக இருந்துள்ளது.
எனினும், அரசாங்கத்தில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. 2021 நவம்பரில் அரசுத்துறையில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 38,073 ஆக இருந்த நிலையில் டிசம்பரில் 37,996 ஆக குறைந்துள்ளது. மொத்தத்தில், ஓமானில் சுமார் 1.38 மில்லியன் வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர்.
பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் மஸ்கட்டில் (579,875), அதைத் தொடர்ந்து வடக்கு அல் பதீனா (193,851) மற்றும் தெற்கு தோஃபர் பிராந்தியத்தில் (159,931) பணிபுரிகின்றனர். ஓமானின் வடக்கு முசந்தம் பகுதி (10,200) மற்றும் அல் வுஸ்தா (23,343) ஆகிய இடங்களில் மிகக் குறைவான அளவில் வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.