சவூதி அரேபியாவில் வெள்ளிக்கிழமையன்று உம்ராவிற்கு சென்ற வழிபாட்டாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தும் மற்றும் ஒரு டிரக்கும் மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 45 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து மதீனாவில் அல் ஹிஜ்ரா நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதீனா நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல் யூதாமா நகரைக் கடந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. மக்கா மற்றும் மதீனா மாகாணங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் இந்த பரபரப்பான பாதையும் ஒன்றாகும்.
இந்த விபத்து நிகழ்ந்தவுடன் மதீனாவிலிருந்து 20 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் மேம்பட்ட பராமரிப்பு பிரிவுகள் மற்றும் பிற ஆதரவு சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சவுதி நாளிதழான அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பல பயணிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு விபத்து நடந்த இடத்தில் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
