சவூதி அரேபியா இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்க நாட்டிற்கு உள்ளேயும் வெளியிலிருந்தும் ஒரு மில்லியன் முஸ்லிம்களை அனுமதிப்பதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒரு அறிக்கையில் “இந்த ஆண்டு ஹஜ் செய்ய வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து ஒரு மில்லியன் வழிபாட்டாளர்களை அனுமதித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் சவூதி சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளைப் பெற்ற 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதில், “உலகளவில் அதிகபட்ச முஸ்லிம்கள் ஹஜ் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் விரும்புகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்டிலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் என்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்”.
“சவூதி அரேபியாவிற்கு வெளியில் இருந்து வருபவர்கள், பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையின் எதிர்மறையான PCR முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த ஹஜ் எனும் புனித பயணத்திற்கு 2019 இல் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்றார்கள். ஆனால் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பிறகு, சவுதி அரசு 1,000 வழிபாட்டாளர்களுக்கு மட்டுமே ஹஜ் மேற்கொள்ள அனுமதி அளித்தது.
பின் கடந்த 2021 ஆம் ஆண்டில், லாட்டரி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 60,000 குடிமக்களுக்கு ஹஜ் செய்ய அனுமதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.