துபாயை மையமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் முக கவசம் அணிவது, பயணிகளுக்கு இனி கட்டாயமில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன. அமீரகத்தில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் முக கவசம் அணிவது அந்தந்த விமான நிறுவனங்களின் முடிவைப் பொறுத்தது என்றும் அதிகாரிகள் கூறியிருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எமிரேட்ஸ் விமானங்களில் முக கவசம் அணிவது பயணிகளின் விருப்பம். நீங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்கிறீர்கள் அல்லது துபாய் வழியாக பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கான முக கவச விதிகள் உங்கள் பயணம் முழுவதும் பொருந்தும்,” என்று எமிரேட்ஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதன்படி, பயணிகள் சென்றடையக் கூடிய இடத்திற்கு முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றால், விமான நிறுவனம் இந்த விதியை அமல்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி (DCAA) வழங்கிய உத்தரவுகளைத் தொடர்ந்து கொரோனா நெறிமுறைகளை புதுப்பித்துள்ளதாக பட்ஜெட் கேரியரான ஃப்ளைதுபாய் விமான நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஃப்ளை துபாய் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “செப்டம்பர் 28, 2022 முதல், துபாய் செல்லும் பயணிகளுக்கு முக கவசம் அணிவது பயணிகளின் விருப்பமானதாக இருக்கும். அதே நேரத்தில் துபாயிலிருந்து பயணம் செய்யும் அல்லது அதன் வழியாக செல்லும் பயணிகள் தாங்கள் சென்றடையக்கூடிய இடத்தில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றால் பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் முக கவசத்தை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலான கொரோனா பாதுகாப்பு விதிகளை தளர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான புறப்படுவதற்கு முந்தைய சோதனைகளுக்கான தேவை அவர்கள் சென்றடையவிருக்கும் இடத்தின் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமீரகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக, மருத்துவ மையங்கள், மசூதிகள் மற்றும் பொது போக்குவரத்து வழிகளைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்ற அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது விருப்பமாக மாற்றப்பட்டுள்ளது.
அதே போல் கொரோனா பாதித்த நபர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஐந்து நாட்களாக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அல் ஹோஸ்ன் செயலியில் கிரீன் பாஸின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எங்களின் செய்திகளை #Youtube வழியாகவும் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் @khaleejtamil என்ற #Youtube பக்கத்தை #Subscribe செய்து கொள்ளுங்கள்.