துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள், டெவலப்பர்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் வில்லா அல்லது ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் என துபாயில் தங்கியிருக்கும் அனைவரும், தங்களுடன் சேர்ந்து தங்கியிருக்கும் சக குடியிருப்பாளர்களின் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற துபாய் நிலத்துறை (DLD-Dubai Land Department) கடந்த செப்டம்பர் மாத இறுதியில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான இரு வாரங்களுக்குள் அனைவரும் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சக குடியிருப்பாளர்களின் விவரங்களை இதுவரை பதிவு செய்யாத குடியிருப்பாளர்கள் அவர்களுடன் வசிக்கும் சக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்று துபாய் நிலத் துறை (DLD) தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, குடியிருப்பாளர்கள் தங்கள் உடன் தங்கியிருப்பவர்களின் பெயர்கள், எமிரேட்ஸ் ஐடி மற்றும் பிறந்த தேதிகளை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
DLD-இன் புதிய உத்தரவுகளின்படி, குடியிருப்பாளர்கள் அவர்களுடன் சேர்ந்து வசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்றும் மற்ற அனைத்து தனிப்பட்ட தரவுகளும் விருப்பமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து துபாய் குடியிருப்பாளர்களுக்கும் DLD ஒரு அறிக்கையில், “உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும், தற்போதுள்ள கட்டிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கும் துபாய் நிலத் துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாடகைக்கு எடுத்தவர்கள் தங்களுடன் இருக்கும் சக குடியிருப்பவர்களின் எண்ணிக்கையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை மேலும் கூறுகையில், “மற்ற அனைத்து தனிப்பட்ட தரவுகளும் விருப்பமானது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிளாட்மேட்களின் பெயர்களை பதிவு செய்வதற்கான இரண்டு வார காலக்கெடுவும் நீக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துபாய் REST அப்ளிகேஷன் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே தெரிய வேண்டும். எமிரேட்ஸ் ஐடி, பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சமீபத்திய புதுப்பித்தலின் காரணமாக, துபாய் REST செயலியானது, பதிவுசெய்தலை முடிக்க, சக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே கேட்கிறது என கூறப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்தவுடன், குத்தகை ஒப்பந்தத்தில் (Tenancy Contract) விவரங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.
மேலும் ஒரு வீட்டில் வசிக்கும் அனைத்து மக்களையும் பதிவு செய்வது, ஒவ்வொரு குடியிருப்பாளரும் முகவரிக்கான சான்றாக Ejari ஒப்பந்தத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.