உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக அபுதாபியில் உள்ள ஒரு டீ ஷாப் ஒன்று உள்ளூர் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) இது குறித்து ஒரு அறிக்கையில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கச்சேரி டீ டைம் கஃபேயை (Kacheri Tea Time Cafeteria) மூடுவதாக தெரிவித்துள்ளது.
சோதனைகளின் போது பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கிருக்கும் சமையலறையில் பூச்சிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும் வெவ்வேறு வெப்பநிலையில் சேமிக்கப்பட்ட சமைத்த உணவு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அங்கு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மோசமாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக ஆபத்துள்ள விதிமீறல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்கத் தவறியது போன்ற சூழல் இருந்ததாகவும் அதகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அந்த கஃபே மூடப்பட்டுள்ளது.
அபுதாபியில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த துறையானது வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் உணவகங்களில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், 800555 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.