சவூதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்திற்குள் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 14,133 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின்படி, நவம்பர் 24 முதல் 30 வரையிலான நாட்களில் நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு களப் பிரச்சாரத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 8,148 குடியுரிமை முறைகளை மீறியவர்கள், 3,859 எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மற்றும் 2,126 தொழிலாளர் சட்டங்களை மீறியவர்கள் அடங்குவர் என கூறப்பட்டுள்ளது. இவர்களில் 377 பேர் நாட்டின் எல்லைக்குள் வர முயன்றபோது கைது செய்யப்பட்டனர் என்றும் 40 பேர் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற எல்லையை கடக்க முயன்றபோது பிடிபட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில், 51% ஏமனியர்கள், 37% எத்தியோப்பியர்கள் மற்றும் 12% பிற நாட்டினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடன் குடியுரிமை மற்றும் பணி விதிமுறைகளை மீறியவர்களை ஏற்றிச் செல்வதிலும், அடைக்கலப்படுத்துவதிலும், அவர்களை மறைக்க முயலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சவூதி அரேபியாவில் விதிமீறல் புரிந்த மொத்தம் 50,215 பேர் தற்போது தகுந்த நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 47,153 ஆண்கள் மற்றும் 3,062 பெண்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அவர்களில் 39,855 பேர் பயண ஆவணங்களைப் பெறுவதற்காக அவர்களின் நாட்டு தூதரகங்களில் பரிந்துரைக்கப்பட்டனர் என்றும், 2,392 பேர் தங்கள் பயண முன்பதிவுகளை முடிக்க பரிந்துரைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் 10,730 பேர் நாடு கடத்தப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒரு நபர் நாட்டிற்குள் நுழைவதை எளிதாக்கும் அல்லது அவருக்கு போக்குவரத்து அல்லது தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.