அமீரகத்தில் தொடங்கும் கடுமையான குளிர்காலம்.. 0°C க்கு வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்..!!
பொதுவாகவே வளைகுடா நாடுகள் அனைத்திலும் தற்போது குளிர் காலம் ஆரம்பித்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனடிப்படையில் அமீரகத்திலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. அமீரக குடியிருப்பாளர்கள் வெப்பம் குறைந்து குளிராகவும் அவ்வப்போது மழையும் பெய்யக்கூடிய அமீரக வானிலையை ரசித்து வரும் நிலையில் குளிர்காலத்தின் தீவிரமான காலம் தற்போதைய காலம்தான் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அமீரகத்தின் எமிரேட்ஸ் வானியல் சங்கம், குளிர்காலத்தின் மிகவும் தீவிரமான காலம் ஜனவரி நடுப்பகுதியில் தொடங்கும் என்றும் கடுமையான குளிர் மற்றும் மலைப்பகுதிகளில் 5 °C க்கும் குறைவான வெப்பநிலையுடன் இந்த காலம் தொடங்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் அல் ட்ரூர் அமைப்பின் (Al Drour system) வளைகுடா பாரம்பரிய நாட்காட்டியில் ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரையிலான காலப்பகுதி குளிர்காலத்தின் உச்சம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த காலம் பத்து நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அமீரக அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி இக்காலம் ‘கடுமையான குளிர் காலம்’ என விவரிக்கப்படுகிறது.
எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் கூறுகையில், “அமீரகத்தில் குளிர்காலம் அதன் உச்சத்தை எட்டுகிறது. இதனால் பாலைவனங்களில் வெப்பநிலை 5 ° C குறைவாகவும், உயரமான மலைப்பகுதிகளில் 0 ° C என குறைவாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில், காலையில் மூடுபனி உருவாகலாம், மேலும் ஒட்டகங்கள் பாலைவனங்களில் பாதியாக உறைந்த தண்ணீரைக் குடிப்பதன் காரணமாகவும் கடுமையான குளிரினாலும் இரத்தப்போக்கு ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அல் ஜார்வானின் கூற்றுப்படி, ஜனவரி 15 குளிர்காலத்தின் இரண்டாவது பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது (ஷாப்த் பருவம் அல்லது குளிர் காலம்) என கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து கடலோரப் பகுதிகளிலும் வெப்பநிலை 23 ° C முதல் 11 ° C வரை இருக்கும், மேலும் சில சமயங்களில் பாலைவனத்தின் சில பகுதிகளில் 5 °C மற்றும் மலைச் சிகரங்களில் 0 °C என வெப்பநிலை குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.