அமீரகத்தில் முடிவுக்கு வந்த நிலையற்ற வானிலை..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே சீரற்ற வானிலை நிலவியதுடன் ஆங்காங்கே கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது உள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம், நாட்டில் நிலவும் நிலையற்ற வானிலை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஒரு பதிவில், அமைச்சகம் நாட்டில் நிலவி வந்த நிலையற்ற வானிலை முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் கூறுகையில் “சமூகத்தின் பாதுகாப்பையும் மனித உயிர் காப்பதையும் மற்றும் பொருட்களை பாதுகாப்பதையும் உறுதிசெய்ய அனைத்து காவல்துறை பொது இயக்குநரகங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்முயற்சியை மேற்கொண்டனர்” என தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன் குமியிருப்பாளர்களுக்கு மின்சார நிறுத்தம் போன்ற இன்னும் பிற சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் அமீரகத்தின் குறிப்பிட்ட பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.