போலி டிஜிட்டல் சான்றிதழ்கள், மின்னணு மோசடி புரிபவர்களுக்கு எச்சரிக்கை.. 5 ஆண்டுகள் சிறை, 5 மில்லியன் ரியால் அபராதம்.. அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவூதி அரேபியாவில் மின்னணு பரிவர்த்தனைகளின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், மின்னணு மோசடியில் ஈடுபடுபவர்கள் அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் சவூதி தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இத்தகைய குற்றம் புரிபவர்களுக்கான தண்டனைகள் குறித்து பொது வழக்குத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி சவூதியில் இத்தகைய மின்னணு மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என சவூதியின் பொது வழக்கு துறை அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அபராதங்கள், மின்னணு கையொப்பங்கள், பதிவுகள் அல்லது டிஜிட்டல் சான்றிதழ்களை போலியாக உருவாக்குபவர்களுக்கும், இந்த மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, மின்னணு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5 மில்லியன் ரியால்கள் வரை நிதி அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான தண்டனைகளுடன் கூடுதலாக, குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் எந்தவொரு சாதனங்கள், அமைப்புகள் அல்லது நிரல்களையும் அவர்கள் பறிமுதல் செய்வார்கள் என்றும் பொது வழக்கு துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தீர்ப்பு இறுதியானதும் குற்றவாளிக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அவர்களின் செலவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் மின்னணு மோசடி ஒரு பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது, மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.