ஈத் அல் ஃபித்ர்: அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறையை அறிவித்த ஓமான்..!!
ஓமானில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, வரும் ஏப்ரல் 20 வியாழன் (ரமலான் 29) முதல் ஏப்ரல் 24, 2023 திங்கள் வரை விடுமுறை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியர்கள் ஐந்து நாள் வார விடுமுறையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 25 செவ்வாய் அன்று வேலை மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ரமலான் மாதத்தின் 29 வது நாளான வியாழன் மாலை ஷவ்வால் மாதத்தின் பிறையைப் பார்க்குமாறு அனைவருக்கும் இஸ்லாமிய அறக்கட்டளை மற்றும் மத விவகார அமைச்சகம் (MERA) அழைப்பு விடுத்துள்ளது. வியாழன் அன்று பிறை தென்பட்டால் அதனை பார்ப்பவர்கள் பல்வேறு கவர்னரேட்டுகளில் உள்ள கவர்னர் அலுவலகங்களின் தொலைபேசிகளை தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வியாழன் பிறை தென்பட்டால் ஈத் அல் ஃபித்ர் ஏப்ரல் 21 வெள்ளியன்று கொண்டாடப்படும். பிறை தென்படவில்லையெனில் ஏப்ரல் 22, சனிக்கிழமை ஈத் அல் ஃபித்ராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.