அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஈத் பெருநாள் தொழுக்கைக்கான நேரம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் ஈத் அல் பித்ர் பண்டிகையானது, இன்று வியாழக்கிழமை பிறை பார்ப்பதை பொறுத்து ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமையா, அல்லது ஏப்ரல் 22 சனிக்கிழமையா என்பது இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும். அதே போன்று அமீரகத்திலும் இன்று இரவு பிறை பார்க்கும் குழு ஒன்று கூடும்.
பிறை பார்ப்பதை பொறுத்து ரமலான் நோன்பானது 29 அல்லது 30 நாட்களாக நீடிக்கும். இன்று வியாழக்கிழமை பிறை தென்பட்டால், புனித ரமலான் மாதம் 29 வது நாளான இன்றுடன் முடிவடையும். அதன்படி ஈத் பெருநாள் நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும். அதுவே பிறை தென்படாவிட்டால் நாளை 30வது நோன்பாகவும், நாளை மறுநாள் சனிக்கிழமை (ஏப்ரல் 22) ஈத் பெருநாளாகவும் கொண்டாடப்படும்.
இந்நிலையில் ஒரு சில எமிரேட்களில் ஈத் பண்டிகை நாளின் காலை வேளையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கான நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களில் ஈத் சிறப்பு தொழுகை நடத்தப்படும் நேரத்தை கீழே காணலாம்.
- அபுதாபி: காலை 6.12 மணி
- அல் அய்ன்: காலை 6.06
- துபாய்: காலை 6.10 மணி
- ஷார்ஜா: காலை 6.07 மணி
- அஜ்மான்: காலை 6.07 மணி
- ராஸ் அல் கைமா: காலை 6.05 மணி
- உம் அல் குவைன்: காலை 6.07 மணி
- ஃபுஜைரா: காலை 6.05 மணி
- கொர்ஃபக்கன்: காலை 6.05 மணி
- அல் தைத்: காலை 6.06 மணி
- மடம் மற்றும் மலிஹா: காலை 6.07 மணி
அமீரகத்தை பொறுத்தவரை நாட்டில் வசிப்பவர்கள் ஈத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை இன்று வியாழக்கிழமை முதல் அனுபவித்து வருகின்றனர். ஒருவேளை ஈத் பண்டிகை சனிக்கிழமையாக இருந்தால் அமீரக குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் என நீண்ட விடுமுறை நாட்களை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.