ADVERTISEMENT

தனியார் நிறுவனங்களுக்கு காலக்கெடு விதித்த அமீரக அரசு..!! 42,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை..!!

Published: 27 Apr 2023, 1:36 PM |
Updated: 27 Apr 2023, 2:56 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள், 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் திறமையான வேலைகளில் 1 சதவீத எமிரேட்டியர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) காலக்கெடுவை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி அமீரகத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள்  தங்களின் அரையாண்டு எமிரேடிசேஷன் இலக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அடையவில்லை எனில், 42,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமைச்சகம் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவின் படி, ஜூலை 2023 இல், இந்த ஆண்டு மற்றும் 2022 இலக்குகளுக்குத் தேவையான அரையாண்டு விகிதத்தை அடையாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பணியமர்த்தப்படாத ஒவ்வொரு எமிராட்டிக்கும், மாதத்திற்கு 7000 திர்ஹம்ஸ் அபராதம் எனும் அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு 42,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன், 2026ம் ஆண்டு வரை இந்த மாத அபராதமானது ஆண்டு ஒன்றிற்கு 1,000 திர்ஹம் வீதம் அதிகரிக்கும். அதாவது 2024ம் ஆண்டில் மாதம் 8000 திர்ஹம்ஸ் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெடரல் சட்டமானது 2026 ஆம் ஆண்டின் இறுதியில் 10 சதவீதத்தை எட்டும் வகையில் ஆண்டுதோறும் எமிரேடிசேஷன் விகிதங்களை 2 சதவீதம் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த இலக்கை அடைவதற்கான வழிமுறையை திருத்தி ஆண்டிற்கு 2 சதவீதம் என்பதற்கு பதிலாக ஆறு மாதத்திற்கு ஒரு சதவீதம் என அமீரக அரசு மாற்றம் செய்துள்ளது.

அதாவது இந்த இலக்கானது ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1 சதவீதமாகவும், ஆண்டின் இரண்டாம் பாதியில் 1 சதவீதமாகவும் வகுக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள், நிறுவனங்கள் திறமையான பதவிகளில் 3 சதவீத எமிராட்டிகளையும், 2023 இன் இறுதிக்குள் 4 சதவீதத்தையும் அடைந்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்நிலையில், எமிரேடிசேஷன் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலாளருமான ஆயிஷா பெல்ஹார்ஃபியா அவர்கள், அபராதத்தை தவிர்ப்பதற்காக எமிரேட்டிசேஷன் இலக்கை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கியது மட்டுமின்றி, திறமையான வேலைகளில் எமிராட்டி திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நஃபிஸ் வழங்கும் ஆதரவிலிருந்து பயனடையுமாறு தனியார் துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.