துபாய் போலீஸின் ‘பாதை ஒழுங்கின்மை’-க்கான 400 திர்ஹம்ஸ் அபராதம்.. காரணங்கள் என்ன.? இதற்கு ஆட்சேபனை எப்படி தெரிவிப்பது?
துபாயில் சாலைகளில் செல்லும் வாகனங்களால் செய்யப்படும் குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு ‘இலகுரக வாகனப் பாதை ஒழுங்குமுறை (light vehicle lane discipline)’ எனும் அபராதம் அவ்வப்போது சில வாகன ஓட்டிகளுக்கு துபாய் காவல்துறையால் விதிக்கப்படுகிறது.
அப்படி அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளில் நீங்களும் ஒருவரா.. நீங்கள் செய்த தவறு குறித்து உறுதியாக தெரியவில்லையா? உங்களது விதிமீறல் குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், பின்வரும் வழிகளில் உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
துபாய் காவல்துறை இணையதளத்தின்படி, இலகுரக வாகனத்தை (light vehicle) இயக்கும் போது, பாதை ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு தவறான பாதையில் செல்லும் வாகன ஓட்டி ஒரு SMS மற்றும் ஒரு லிங்க் மூலம் எச்சரிக்கை செய்யப்படுவார். அந்த லிங்க்கில் குற்றத்தின் வகை, நேரம், தேதி மற்றும் நம்பர் பிளேட்டின் படம் உள்ளிட்ட விதிமீறலின் விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
பாதை ஒழுங்கின்மைக்காக அபராதம் விதிக்கப்படும் காரணங்கள்?
சாலையில் செல்லும் பிற வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பின்வரும் சூழல்களை துபாய் காவல்துறை பாதை ஒழுங்கின்மை செயல்களாக குறிப்பிட்டுள்ளது. அவை,
- பாதையின் (lane) இரு கோட்டிற்கு உள்ளே செல்லாமல் பாதையின் மையத்தில் (இரண்டு பாதைகளுக்கு நடுவில்) வாகனத்தை செலுத்துவது.
- வெளியேறும் பாதை அல்லது இண்டர்செக்ஷனை நெருங்கும் போது நிறுத்தக் கோட்டைத் (Stop line) தவற விடுவது.
- நெரிசலான பாதையைத் தவிர்க்க வரிசையில் நிற்காமல் முந்திச்சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது.
- ஆபத்தான முறையில் பாதைகளை சட்டென்று மாற்றுவது மற்றும் தூரம் பொருத்தமற்றதாக இருக்கும் போது இரு வாகனங்களுக்கு இடையில் நுழைய முயற்சிப்பது.
- வலது அல்லது இடது புறம் திரும்பும் போது இன்டிகேட்டரை பயண்படுத்தாமல் பாதையை மாற்றுவது.
துபாயை பொறுத்தவரை எமிரேட்டின் பல பகுதிகளில் உள்ள வெளியேறும் பாதைகளில் (Exit lanes) திடீரென பாதையை மாற்றும் வாகன ஓட்டிகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார் அமைப்புகளில் ப்ளாஷ் இல்லை, இது ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறும் போது அவர்களை எச்சரிக்கும். அத்துடன் எமிரேட் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் நேரடி கேமராக்களும் உள்ளன.
இந்த கேமராக்கள் மூலம் கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் போக்குவரத்து ஓட்டத்தை நேரடியாகவும் கண்காணிக்கின்றனர். எனவே, பதிவுசெய்யப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தி, கார் நம்பர் பிளேட்டைப் பெரிதாக்கி, டிரைவர் விதிமீறல் செய்ததை நிரூபிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களை காவல்துறையினர் எடுக்கலாம். மேலும், வாகன ஓட்டி ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் இந்த வீடியோக்களும் ஆதாரமாக பயன்படுத்தப்படும்.
ஆட்சேபனை தெரிவித்தல்:
உங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான விதிமீறலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாதபட்சத்தில், நீங்கள் தேராவின் போக்குவரத்துத் துறை இணையதளமான https://www.dxbpp.gov.ae/portal/ என்ற லிங்கிற்கு சென்று உங்கள் விதிமீறலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
அதுவே, உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் போர்ட்டலில் பட்டியலிடப்பட்ட அபராதங்களில் இல்லை என்றால், நேரடியாக தேரா போக்குவரத்துத்துறை அல்லது அல் பர்ஷா போக்குவரத்துத் துறை ஆகிய இடங்களுக்குச் சென்று அபராதத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04/6063915 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ அல்லது நேரில் சென்றோ விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
போக்குவரத்து அபராதம் செலுத்துதல்:
துபாயின் சாலைகளில் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்திற்கு பாதை ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். அதனை மீறும் பட்சத்தில் ஏதேனும் போக்குவரத்து விதிமீறல் ஏற்பட்டால், வாகன ஓட்டிகள் பல்வேறு வழிகளில் தங்களின் அபராதத்தை செலுத்தலாம். இதை துபாய் காவல்துறையின் இணையதளம் (https://www.dubaipolice.gov.ae) அல்லது துபாய் போலீஸ் மொபைல் ஆப் மூலமும் செலுத்தலாம். அதற்கு ஓட்டுநர்கள் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, தொகையைச் செலுத்தி தங்களின் அபராதத்தை செலுத்திக்கொள்ளலாம்.