இனிமேல் வாகனத்தில் இருந்து இரைச்சல் சத்தம் வந்தால் 1 மில்லியன் ரியால் அபராதம்… சுற்றறிக்கை வெளியிட்ட கத்தார் அரசு!!
கத்தார் நாட்டில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உருவாக்கும் இரைச்சல்களின் அளவுகள், கத்தார் பொது அமைப்பு வழங்கிய தரநிலைகள் மற்றும் அளவிடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று அரசாங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட எண் (8) மற்றும் அதன் திருத்தங்கள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குநர்களின் கடமைகளை குறிப்பிடுகிறது.
இந்த சட்டத்தின் படி, அமைச்சகம் இரைச்சல் அளவை கட்டுப்படுத்த பின்வரும் விதிமுறைகளை விதித்துள்ளது. ஒரு கார் அல்லது மோட்டார் சைக்கிளின் இரைச்சல் அளவு தயாரிக்கும் பொழுது அதன் விவரக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளை (dB இல்) மீறக்கூடாது என்று அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த விதிமுறைகள் பெட்ரோ அல்லது டீசலில் இயங்கும் என்ஜின்கள் இரண்டிற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
இரைச்சல் அளவினை தெரிந்து கொள்ள, எஞ்சின் மற்றும் வாகனம் இயக்கத்தில் இருக்கும் பொழுது சத்தத்தை அளவிட வேண்டும் எனவும் கூறியுள்ளது. எனவே, இரைச்சல் அளவை மீறுவது, நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (8) இன் கட்டுரைகள் (5), (6), மற்றும் (13) விதிகளின் வெளிப்படையான மீறலாகக் கருதப்படுகிறது.
விதிமுறைகளை மீறும் பட்சத்தில், 1 மில்லியன் கத்தார் ரியால் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளின்படி எரிச்சலை ஏற்படுத்தும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கத்தார் அரசின் விதிமுறைகளின் படி, இரைச்சலை கட்டுப்படுத்த வாகனங்கள் கீழ்கண்ட தரநிலை குறிப்புகளை கொண்டிருக்க வேண்டும்.
வளைகுடா நாடுகளில் வாங்கப்பட்ட கார்களின் தரநிலை விவரக்குறிப்புகள்: — ஒலி மாசுபாடு (GSO1624/2002), இயந்திர தயாரிப்புகள் விவரக்குறிப்புத் துறை.
வளைகுடா நாடுகளில் வாங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் தரநிலை விவரக்குறிப்புகள் — ஒலி மாசுபாடு (GSO ECE 41-1:2007), இயந்திர தயாரிப்புகள் விவரக்குறிப்புத் துறை.
எனவே, இது தொடர்பான அரசாங்கத்தின் சுற்றறிக்கை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து பராமரிப்பு மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இரைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களின் பாகங்களை சரி செய்ய சுற்றறிக்கை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30-60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.