UAE: ஆபத்தை விளைவிக்கும் அலட்சியம்!! வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்..!! வாகன ஓட்டிகளை அறிவுறுத்திய அதிகாரிகள்…
சாலையில் வாகனம் ஓட்டும்போது, மொபைலில் பேசிக்கொண்டே செல்வது அல்லது மெஸ்ஸேஜ்களை சரிபார்ப்பது போன்ற நடத்தைகள் பெரிய பிரச்சனை இல்லை என்றும் அதனால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்றும் அலட்சியமாக நினைக்கிறீர்களா?
அப்படியானால், இந்த புள்ளிவிவரங்கள் பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஷார்ஜா காவல்துறை நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 80 சதவீத சாலை உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்கள் அனைத்தும் மொபைல் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டியதன் விளைவினால் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மொபைல் ஃபோன்கள் ஓட்டுனர்களின் கவனத்தை திசைதிருப்புவதால், பல கடுமையான சாலைவிபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு வாகன ஓட்டிகளின் கவனம் மொபைல் போன்களால் சிதறும் போது, அவர்கள் செய்யும் பொதுவான பிழைகளை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் கையேட்டில் பட்டியலிட்டுள்ளது. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- பல வழிச் சாலையில் பாதை மாறுதல் அல்லது சாலையின் குறுக்கே திடீரென திருப்புதல்.
- சீரற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், காரணமின்றி அதிவேகத்தில் செல்வது அல்லது மெதுவாகச் செல்வது.
- முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைபிடிப்பதில் சிரமம்.
- சாலையில் தவறான கண்ணோட்டம் மற்றும் போக்குவரத்தில் பாதுகாப்பான இடைவெளிகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் ஓட்டுவது.
அலட்சியமாக வாகனம் ஓட்டினால் அபராதம்:
அமீரக போக்குவரத்துச் சட்டத்தின் படி, ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில், தனது மொபைல் ஃபோனை பயன்படுத்திக் கொண்டே அலட்சியமாக வாகனம் ஓட்டினால், அவரது டிரைவிங் லைசன்சில் நான்கு பிளாக் பாயிண்டுகளும் 800 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும்.
மொபைல் அழைப்பு மற்றும் கவனச்சிதறலை எவ்வாறு தவிர்க்கலாம்?
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, உங்கள் மொபைல் அழைப்புகளை எடுத்துப் பேச நீங்கள் ஹேண்ட்ஸ்ஃப்ரீ சாதனத்தைப் பயன்படுத்தினாலும், அது சாலையில் இருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்பக் கூடும். ஆகையால், பார்க்கிங் செய்யும் போது மட்டும் மொபைல் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் இத்தகைய சூழலில், நீங்கள் வாகனம் ஓட்டும்போது, அருகிலிருக்கும் பயணியிடம் கொடுத்து உங்கள் ஃபோனுக்குப் பதிலளிக்கச் செய்யுங்கள் அல்லது அதற்குப் பதிலாக உங்கள் ஃபோனை வாய்ஸ் மெயிலுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்றும் RTA குறிப்பிட்டுள்ளது.