சவுதி அரேபியா: ஃபோனிற்கு கால் செய்பவர்களின் பெயர் மற்றும் அடையாளத்தை காட்டும் புதிய வசதி..!! அக்டோபர் முதல் நடைமுறை..!!
சவுதி அரேபியா நாட்டின், தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் (CST) மொபைல் போனில் அழைப்பு வரும்பொழுது, அழைப்பவரின் பெயர் மற்றும் அடையாளம் காட்டப்படுவதற்கான தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த சேவையானது அக்டோபர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
இதன்படி 2G, 3G, 4G மற்றும் 5G உள்ளிட்ட எந்த வகையான நெட்வொர்க்கில் இருந்தாலும் அழைப்பாளரின் பெயரையும், எண்ணையும் சாதனம் காண்பிக்க வேண்டும். இந்த சேவையானது, பயனாளர்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்பத்தின் திறனை அதிகரிக்கும் நோக்கில் வழங்கப்பட உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுடன், டெர்மினல் சாதனங்களை இணைத்து அதன் மூலம் பயனாளர்களின் பெயர் மற்றும் அடையாள எண் ஆகியவை அப்டேட் செய்யப்படும். எனவே எந்த பயனாளர்கள் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கு அழைத்தாலும் அவரைப் பற்றிய முழு விவரமும் அழைப்பின் பொழுது காண்பிக்கப்படும். இதன் மூலம், அழைப்பு வரும்பொழுது அவர் பெயர் மட்டுமல்லாமல் அவருடைய அடையாளமும் சேர்ந்து வருவது இதன் கூடுதல் அம்சமாகும்.
சேவை வழங்குநர்கள் இந்த அம்சத்தை தங்கள் நெட்வொர்க்குகளில் பயன்படுத்தி அழைப்பவரின் பெயரைத் தீர்மானிக்க முடியும், இந்த அம்சத்தை செயல்படுத்த இணைக்கப்பட்ட தரப்பினரின் தரப்பில் எந்த நடவடிக்கையும் தேவையில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் ஏற்கனவே நெட்வொர்க் மையத்தில் இருப்பதால், தானாகவே தகவல்கள் இணைக்கப்பட்டு விடும்.
தற்பொழுது அழைப்பவரின் பெயர் மற்றும் அடையாளம் ஆகியவை சரியாக வருகின்றதா என்ற சோதனைகளை நடந்த முதல் கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முதலில் அனைத்து மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களின் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் அடையாளங்கள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற சாதனங்களின் உற்பத்தியாளர்கள் இந்த தொழில்நுட்ப அம்சத்தை சம்பந்தப்பட்ட எல்லா சாதனங்களிலும் செயல்படுத்தும் அளவிற்கு வடிவமைக்க வேண்டும் எனவும், மேலும் நெட்வொர்க் மூலம் அழைப்பவரின் பெயரையும் எண்ணையும் பெறுவதற்கும், சாதனத்தின் திரையில் அதைக் காட்டுவதற்கும் ஏற்றவாறு சாதனத்தின் அடையாளத்தை ஆதரிக்க இனி வரும் காலங்களில் உறுதியளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே, இனி சவூதியில் வசிப்பவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து அழைப்பினை பெற்றால் கூட, அவர்கள் பெயர் என்ன மற்றும் அடையாளம் என்ன என்பதை மொபைல் போன் திரையில் தெளிவாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.