ரெசிடென்ஸி விதிமீறுபவர்களுக்கு உதவும் வெளிநாட்டவர்களும் நாடு கடத்தப்படுவர்..!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட குவைத்..!!
குவைத் நாட்டில் ரெசிடென்ஸ் சட்டங்களை மீறும் வெளிநாட்டினர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரங்களையும் குவைத் அரசு அடிக்கடி வெளியிட்ட வண்ணம் உள்ளது.
இந்நிலையில், விதி மீறல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்த ஒரு சூழ்நிலையிலும் ரெசிடென்ஸி விதிகளை மீறுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவி செய்பவர்களும் நாடு கடத்தப்படுவார்கள் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-கலீத், உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் ஆகியோர் வகுத்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது விதிமீறல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ஏறத்தாழ,150,000 பேர் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் பகுதிகளான ஜிலீப் அல்-ஷுயூக், கைதான், ஃபர்வானியா, மஹ்பூலா, அம்காரா, அல்-மஸ்ரா மற்றும் அல்-ஜவாக்கிர் போன்ற பகுதிகளில் விதிமீறல் குற்றங்களை கண்டறிவதற்காக அரசு பாதுகாப்பினை வலுப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு வெளிநாட்டவர்கள் உறுதுணையாக இருந்தால், அவர்களும் சட்ட ரீதியில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள விதிமீறல் குற்றங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக நாடு கடத்துவதே அரசின் நோக்கம் எனவும், குவைத் நாட்டினை சட்டம் மற்றும் ஒழுங்கில் நிலையான நாடாக மாற்றுவதே அரசின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.