கொளுத்தும் வெயில்… 1902 ஆம் ஆண்டிற்குப் பின் அதிக வெப்பமான மாதத்தை பதிவு செய்த பஹ்ரைன்..!!
பூமியானது இதுவரை வரலாறு காணாத வெப்பத்தினை பதிவு செய்து வருகின்றது. வளைகுடா நாடுகள், அமெரிக்கா, சைனா போன்ற நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. குளிர்வாக இருக்கும் அண்டார்டிகாவில் கூட வெப்ப அலைகள் வீசுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த அதிகபட்ச வெப்பமானது வளைகுடா நாடுகளில் உள்ள பஹ்ரைன் நாட்டினையும் வாட்டி வதைக்கின்றது. எனவே, 1902ம் ஆண்டு முதல் கணக்கில் கொண்டால் ஜூலை 2023 மாதமானது அதிக வெப்பமான இரண்டாவது ஜூலை மாதம் என்று வானிலை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 121 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிக வெப்பமான மாதமாக கடந்த ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.
பஹ்ரைன் நாட்டில் ஜூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை 36.6 ° C ஆக பதிவாகியுள்ளது, இது நீண்ட கால இயல்பை விட 1.5 ° C அதிகமாகும். ஜூலை 31 அன்று பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலையான 46.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
அதே நேரத்தில் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 31.3 டிகிரி செல்சியஸ் குறைந்த வெப்பநிலையாக பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.