அமீரக செய்திகள்

அமீரகத்தில் வாகன ஓட்டியின் கவனக்குறைவால் சாலையில் மோதி தீப்பிடித்த கார்… அசால்டாக ரோட்டில் ஸ்டன்ட் செய்த பெண்களை கைது செய்த காவல்துறை..!! அதிகாரிகள் வெளியிட்ட வீடியோ..!!

போக்குவரத்து விதிமுறைகளை கவனமாக கடைபிடிக்குமாறு ஐக்கிய அரபு அமீரக அரசானது தொடர்ந்து மக்களை அறிவுறுத்திக்கொண்டே இருக்கின்றது. இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் ஐக்கிய அரபு அமீரக தலைநகரில் நடந்த பயங்கர விபத்துகளின் அதிர்ச்சியூட்டும் வீடியோவை அபுதாபி காவல்துறை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

அதில் 3 கார் விபத்துகளின் வீடியோக்களை காவல்துறை பகிர்ந்துள்ளது. இதில் முதல் விபத்தில், மெதுவாக சென்று கொண்டிருந்த காரின் மீது, பின்னால் இருந்து வந்த கார் வேகமாக மோதி அதன் காரணமாக கார் தீப்பிடித்து எறிந்தது. இரண்டாவது விபத்தில், எதிரே வந்த வாகனத்தின் மீது கார் அதிவேகமாக மோதியதால் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று கார்கள் சேதம் அடைந்துள்ளது என வீடியோ காட்டுகின்றது. மூன்றாவது விபத்தில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாடு இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தீ விபத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த விபத்துக்களை மேற்கோள்காட்டி வாகனம் ஓட்டும் பொழுது கவனக்குறைவாக இருப்பது குற்றம் என்றும், ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துதல் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் 800 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நான்கு புள்ளிகள் கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

சாலைகளில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டும் நபர்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொருபுறம் துபாயில் மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட் செய்த பெண்களுக்கு துபாய் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் தங்கள் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மறைத்து இருசக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்யும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். வீடியோ வைரலானதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயியின் கூற்றுப்படி, அவர்கள் “மோட்டார் சைக்கிளின் கைப்பிடியைப் பிடிக்காமல் பயணம் செய்வது, மோட்டார் சைக்கிளில் நின்று, ஒரு சக்கரத்தில் சவாரி செய்வது” போன்ற காட்சிகள் வீடியோவில் காணப்பட்டது எனவும், ஃபெடரல் டிராஃபிக் சட்டத்தின்படி, அத்தகைய மீறல்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் மற்றும் 23 டிராஃபிக் புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.

மேலும் பொதுமக்கள் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் அல்லது விதிமீறல்களை கண்டறிந்தால் உடனடியாக 901 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது துபாய் போலீஸ் ஸ்மார்ட் பயன்பாட்டில் உள்ள ‘Police Eye’ சேவையின் மூலமாகவோ உடனடியாகப் புகாரளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!