அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் புதிய ஒப்பந்தம்: ஒரே டிக்கெட்டில் மதுரை, திருச்சி உட்பட இந்தியா, இலங்கையில் 15 இடங்களுக்குச் செல்லலாம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையானதும், மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றானதுமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், இலங்கையைச் சேர்ந்த விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் புதிய ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம், பயணிகளுக்கு ஒரே டிக்கெட்டில் இந்தியா மற்றும் இலங்கையில் சுமார் 15 இடங்களுக்கு செல்லும் வாய்ப்பையும் எமிரேட்ஸ் வழங்க உள்ளது.

விமான போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய கூட்டான்மையின் மூலம், UAE மற்றும் இலங்கையை சேர்ந்த இந்த இரண்டு விமான நிறுவனங்களும் கொழும்பு மற்றும் துபாய் வழியாக புதிய இடங்களை இணைப்பதற்கான பரஸ்பர நெட்வொர்க் இன்டர்லைன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், எமிரேட்ஸ் விமானப் பயணிகள் தேர்வு செய்வதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸால் கொழும்பு வழியாக இயக்கப்படும் 15 புதிய இலக்குகளுக்கான இன்டர்லைன் பயணத்திற்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த இன்டர்லைன் நெட்வொர்க்கில் தமிழகத்தின் மாவட்டங்களான மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் இவ்விரு நகரங்களுக்கு பயணிப்பவர்கள் துபாயிலிருந்து இலங்கை வழியாக எமிரேட்ஸ் மற்றம் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பயணிக்க முடியும்.

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாராளமான பேக்கேஜ் பாலிசி (generous baggage policy) மற்றும் தொந்தரவு இல்லாத பேக்கேஜ் சோதனையுடன் (hassle-free baggage check)  இறுதி இலக்கை அடையும் வரை, ​​ஒரே டிக்கெட்டில் தடையின்றி பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் கொச்சின், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மாலே, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், ஜகார்த்தா, குவாங்சோ, சியோல் மற்றும் டோக்கியோ ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னைக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பயணிகள் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் குளோபல் நெட்வொர்க்கை அணுகுவதன் மூலம், துபாய்க்கு அப்பால் எமிரேட்ஸால் இயக்கப்படும் 15 நகரங்களுக்கு ஒரே டிக்கெட்டில் செல்ல முடியும்.

அதாவது, இந்த இன்டர்லைன் நெட்வொர்க்கில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய புள்ளிகள் இணைக்கப்பட உள்ளது. அதாவது, பஹ்ரைன், அம்மான், தம்மாம், மதீனா, கெய்ரோ, மஸ்கட், நைரோபி, மாஸ்கோ, டெல் அவிவ் மற்றும் நியூயார்க் JKF, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, பாஸ்டன் மற்றும் ஹூஸ்டன் போன்ற 15 நகரங்களுக்கு எமிரேட்ஸில் பறக்கும் ஸ்ரீலங்கனின் வாடிக்கையாளர்கள் பிரீமியம் பயண அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் https://emirates.com/ மற்றும் https://srilankan.com/ வழியாக அவர்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரண்டு விமான நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!