நிலையற்ற வானிலையை எதிர்கொள்ள தயாராகும் அமீரக அரசு.. NCEMA உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் மே 2ம் தேதி மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை நிலவும் என அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட முன்னறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் எதிர்பார்க்கப்படும் இந்த நிலையற்ற வானிலையை எதிர்கொள்ள அமீரக அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 16ம் தேதி நாட்டில் நிலவிய மோசமான வானிலையின் போது பெய்த கனமழையால் அமீரகமெங்கும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் ஆணையம் (NCEMA) உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின் போது, இந்த நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நிலைமையை சமாளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தயார்நிலை குறித்தும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த முக்கியமான நேரத்தில் இது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், மேலும் துல்லியமான தகவல், வழிகாட்டுதல் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பின்பற்றவும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடுதலாக, மோசமான வானிலையின் போது குறிப்பாக அதிக மழை பெய்யும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், பள்ளத்தாக்குகள் மற்றும் நீரோடை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel