துபாய்: ஈத் விடுமுறைக்கு இந்த 8 கடற்கரைகளில் குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி..!! கட்டுப்பாடை அறிவித்த முனிசிபாலிட்டி..!!

அமீரகத்தில் ஈத் அல் அதாவிற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த விடுமுறை நாட்களை சிறப்பாக கழிப்பதற்கான பல்வேறு திட்டங்களையும் அமீரக குடியிருப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் செல்லக்கூடிய முக்கிய பொது இடமாக கடற்கரை இருக்கின்றது. வரவிருக்கும் ஈத் அல் அதா விடுமுறை நாட்களிலும் பலர் கடற்கரைக்கு செல்ல நினைத்திருந்தாலும் துபாயில் ஒரு சில கடற்கரைகளுக்கு நிபந்தனைகள் தற்பொழுது விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது துபாயில் உள்ள எட்டு பொது கடற்கரைகளும் ஈத் அல் அதா விடுமுறையின் போது குடும்பங்களுக்காக ஒதுக்கப்படுவதாகவும், இந்த கடற்கரைகளில் குடும்பங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி (DM) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பின் படி, கோர் அல்-மம்சார் பீச், கார்னிச் அல்-மம்சார், ஜுமேரா 1, ஜுமேரா 2, ஜுமேரா 3, உம் சுகீம் 1, உம் சுகீம் 2 மற்றும் ஜெபல் அலி பீச் ஆகிய எட்டு கடற்கரைகளும் ஈத் அல் அதா விடுமுறை நாட்களில் குடும்பங்களுக்காக ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவது மற்றும் விடுமுறை நாட்களில் எமிரேட்டில் உள்ள கடற்கரைகளை அனைவரும் அனுபவிக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்கான முனிசிபாலிட்டியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே காலகட்டத்தில் கடற்கரை பாதுகாப்பை மேம்படுத்த 140 பேர் கொண்ட பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவும் முனிசிபாலிட்டியால் நியமிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் 65 உறுப்பினர்களைக் கொண்ட களக் கட்டுப்பாட்டுக் குழு, கடற்கரைச் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து, பார்வையாளர்களுக்கான பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியில் பொது கடற்கரைகள் மற்றும் வாட்டர் கேனல் துறையின் இயக்குனர் இப்ராஹிம் முகமது ஜுமா பேசும் போது, குடிமை அமைப்பு அதன் மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து ஈத் அல் அதா விடுமுறையின் போது கடற்கரைகளில் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு, துபாயை உலகின் சிறந்த வாழக்கூடிய நகரமாக மாற்றுவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக, புதுமையான விளக்கு அமைப்புகள், எலெக்ட்ரானிக் ஸ்க்ரீன்கள் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் கூடிய மூன்று இரவு கடற்கரைகள் எமிரேட்டில் தொடங்கப்பட்டன. இரவு நேர குளியலுக்காக நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் கடற்கரைக்கு திரண்டதால் இந்த முயற்சிக்கு மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், இந்த கடற்கரைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கடற்கரை இடங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் சிறப்பு பணியாளர்கள் மற்றும் சேவைகளைக் கொண்டுள்ளன. தற்பொழுது, எமிரேட்டில் உள்ள நீர் வழிகள் மற்றும் பொது கடற்கரைகள் துபாய் முனிசிபாலிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது, மேலும், மேம்பட்ட சேவைகள் மற்றும் கவர்ச்சிகரமான ஒருங்கிணைந்த வசதிகளை வழங்குவதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
இந்த முயற்சிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதையும், அவர்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 2040 ஆம் ஆண்டிற்குள் துபாயின் கடற்கரையை 400 சதவீதம் விரிவுபடுத்துவதற்கான ஒரு மாஸ்டர் பிளான் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel