இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சில நிபந்தனைகளை அமீரக அரசு விதித்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், விசிட் விசாவில் வருபவர்கள் அதே விமானத்தில் தங்களின் ரிட்டர்ன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே விமான நிலையங்களில் அனுமதிக்கப்படுவதாக பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், சில பயணிகள் வேறொரு விமான நிறுவனத்தின் விமானங்களில் இந்தியாவிற்கு திரும்புவதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்ததால் அமீரகத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் சில விமான நிறுவனங்களின் ஆலோசனைகளை மேற்கோள் காட்டி, அதே விமானத்தில் ரிட்டர்ன் டிக்கெட்டை முன்பதிவு செய்ய பயண முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சில விமான நிறுவனங்கள் தங்களின் பயண ஏஜென்டுகளுக்கு அனுப்பிய செய்தியில், அமீரகம் செல்ல அவர்களுடன் முன்பதிவு செய்தால், இந்தியா திரும்புவதற்கான பயணமும் அதே விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இந்த புதிய தேவைக்கு இணங்கத் தவறினால் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு மறுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனவே, தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க அதே விமானத்தில் முன்பதிவு செய்வது நல்லது என்று பயண முகவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கடுமையான சோதனைகள்
துபாயில் உள்ள விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளிடம் அதிகாரிகளால் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பப்பட்டதைத் தொடர்ந்து ரிட்டர்ன் டிக்கெட்டுகள் குறித்த இந்த ஆலோசனைகளை பயண முகவர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு, சில பயணிகள் சமீபத்திய தேவைகளை பூர்த்தி செய்யாததால் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பயண முகவர்கள் தெரிவித்தனர்.
அதாவது, விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருகை தரும் பயணிகள் அவர்களின் ரிட்டர்ன் டிக்கெட்டின் நகல் உட்பட 3,000 திர்ஹம்ஸ்க்கு சமமான நிதியை பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டிலோ எடுத்துச் செல்ல வேண்டும், மேலும் ஹோட்டல் முன்பதிவு அல்லது அமீரகத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினரின் கடிதம் போன்ற தங்குமிடத்திற்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான, விசிட் விசா நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய பயணிகள் உறுதிசெய்யப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பயணிகள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இப்படி விமான நிலையத்தில் அதிகாரிகளால் நுழைய மறுக்கப்படும் பயணிகளை திரும்பப் பெறுவது அவர்களை ஏற்றி வந்த விமான நிறுவனத்தின் பொறுப்பாகும்.
இதனால், ரிட்டர்ன் டிக்கெட் இல்லாத பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளைத் தவிர்க்க, தேவையான ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்லாத பயணிகளை விமானத்தில் ஏறுவதற்கு அந்தந்த விமான நிறுவனங்கள் தடை செய்வதாக பயண முகவர்கள் விவரித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel