அமீரக செய்திகள்

துபாய்: 115,000 திர்ஹம்ஸை நிறுவனத்தில் இருந்து திருடிய இந்திய ஊழியர்.. அபராதம், சிறை தண்டனையுடன் நாடு கடத்தவும் உத்தரவிட்ட நீதிமன்றம்..

அமீரகத்தில் சட்டங்கள் கடுமையாக இருந்தபோதிலும் ஒரு சிலர் குற்றங்களை மேற்கொண்டுதான் இருக்கின்றனர். அவற்றில் ஒன்றாக அமீரகத்தில் இருக்கக்கூடிய பொது வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், நிறுவனத்தில் இருந்து பெரும் தொகையை மோசடி செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இருக்கக்கூடிய வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக கணிசமான தொகையை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றுடன் அவர் மோசடி செய்ததற்கு இணையான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், துபாய் அரசு வழக்கறிஞர்கள் 34 வயதான இந்தியர் மீது குற்றம் சாட்டியிருக்கின்றனர். இது 2017 முதல் டிசம்பர் 2019 வரை அல் முராக்காபத் காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததாக கூறப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்குவதற்கும், பணம் வசூலிக்கும் பொறுப்பிலும் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், மொத்தம் 114,966 திர்ஹம்களை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஓட்டுநராகப் பணிபுரிந்த சமயத்தில், ​​அந்த நபர் மோசடி வேலைகளை கையாண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணங்களை நிறுவனத்தின் கணக்கியல் அமைப்பில் பதிவு செய்யாமலும் நிறுவனத்திற்கு தெரியாமலும் அந்த பணத்தை எடுத்துள்ளார். நீதிமன்றத்தில் சக ஊழியர் ஒருவர் கூறுகையில் “பிளாஸ்டிக் சமையலறைப் பாத்திரங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கும், பணம் வசூலிப்பதற்கும் அவர் பொறுப்பாளியாக இருந்தார்” என்று கூறியுள்ளார்.

விசாரணைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வருடாந்திர விடுப்பு எடுத்த பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் செலுத்துவது நிறுவனத்தின் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்பதை அவருக்கு பதிலாக பணிபுரிந்த மாற்று ஓட்டுநர் கண்டறிந்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்ட போது, ​​பல வாடிக்கையாளர்கள் தாங்கள் அந்த நபருக்கு பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக ரசீதுகளையும் அவர்கள் வைத்திருந்திருக்கின்றனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் 52,575 திர்ஹம்களை மட்டுமே மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டு, 90 நாட்களுக்குள் பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்து வாக்குமூலத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இருப்பினும், நிறுவனம் தணிக்கை செய்ததில், மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கானது தீர விசாரிக்கப்பட்டு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒரு மாத சிறை தண்டனையுடன் நாடு கடத்தவும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!