அமீரக செய்திகள்

துபாயின் புதிய ‘புளூ லைன் மெட்ரோ’ திறக்கப்படும் தேதியை அறிவித்த RTA..!! விபரங்கள் வெளியீடு..!!

துபாயில் அதிகரித்து வரும் போக்குவரத்தை எளிதாக்க தற்பொழுது கிரீன் லைன், ரெட் லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக புளூ லைன் திட்டமானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துபாய் மெட்ரோ ப்ளூ லைன் விரிவாக்கத் திட்டத்திற்கு சுமார் 20.5 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான ஒப்பந்தங்களை துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த Mapa, Limak மற்றும் CRRC என்ற மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திகளின் படி, துபாய் மெட்ரோ ப்ளூ லைன் 14 மெட்ரோ நிலையங்களுடன், 30 கிமீ நீளத்திற்கு கட்டப்பட உள்ளன. மேலும், அதன் நெட்வொர்க்கில் 28 ரயில்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 200,000 ரைடர்களை ஏற்றிச் செல்லும் என்றும் 2040 ஆம் ஆண்டில் 320,000 பயணிகளாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துபாய் மெட்ரோவின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி, 9.9.2029 அன்று இந்த ப்ளூ லைன் மெட்ரோ சேவை பொது பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. துபாய் மெட்ரோவின் வரலாற்றில் ஒன்பது ஒரு தனித்துவமான எண்ணாகும். முன்பு, 9-9-2009 அன்று இரவு 9 மணிக்கு துபாய் மெட்ரோ சரியாக 9-வது நிமிடத்தில் 9-வது வினாடியில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய வழித்தடம்

RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இந்த போக்குவரத்து நெட்வொர்க் ஒரு மணி நேரத்திற்கு 46,000 பயணிகளை இரு திசைகளிலும் ஏற்றிச் செல்லும் மற்றும் அது சேவை செய்யும் வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலை 20 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய நகர்ப்புறங்களுக்கு இடையேயான இணைப்பை வழங்கும், பயண நேரம் 10 முதல் 25 நிமிடங்கள் வரை இருக்கும் என்று ஆணையம் கூறியுள்ளது.

மெட்ரோ சேவை இணைக்கும் ஒன்பது முக்கிய பகுதிகளில் மிர்டிஃப், அல் வர்கா, இன்டர்நேஷனல் சிட்டி 1 மற்றும் 2, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ், அகாடமிக் சிட்டி, ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியா, துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பாதையானது, ’20 நிமிட நகரத்தை’ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நேர்த்தியான வடிவமைப்பு

ப்ளூ லைனில் உள்ள புதிய மெட்ரோ நிலையங்கள், ரெட் மற்றும் கிரீன் லைனில் தற்போது பயன்பாட்டில் உள்ள முழுமையாக மூடப்பட்ட நிலையங்களின் கட்டமைப்புகளுக்கு மாறாக நேர்த்தியான, எதிர்கால வடிவமைப்பைக் காண்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து விலை, வாடகை அதிகரிக்கும்

செய்தி ஊடகங்களில் வெளியான முந்தைய அறிக்கையின்படி, இன்டர்நேஷனல் சிட்டி, சிலிக்கான் ஒயாசிஸ், ராஸ் அல் கோர், மிர்டிஃப், அல் வர்கா போன்ற துபாயின் ப்ளூ லைன் கடந்து செல்லும் முக்கிய பகுதிகளில் சொத்து விலைகள் மற்றும் வாடகைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மெட்ரோ வழித்தடம் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள நிலம் மற்றும் சொத்துகளின் மதிப்பை 25 சதவீதம் வரை உயர்த்தும் என்றும் RTA தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!