NYE 2025: துபாயில் டிசம்பர் 31 மாலை 4 மணி முதல் இந்த சாலைகள் அனைத்தும் மூடப்படும்!! குடியிருப்பாளர்களை அறிவுறுத்திய RTA..!!

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், துபாயில் புத்தாண்டு தினத்தன்று நகரின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலை உட்பட பிற முக்கிய வழிகள் படிப்படியாக மூடப்படும் என்று எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக RTA இன் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஹுசைன் அல் பனா அவர்கள் பேசுகையில், டிசம்பர் 31 மாலை 4 மணி முதல் அனைத்து முக்கிய சாலைகளிலும் மூடல் அமல்படுத்தப்படும் என்றும், டவுன்டவுன் துபாய் மற்றும் பிற பிரபலமான வானவேடிக்கை காட்சி இடங்களுக்குச் செல்லும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே தொடங்கி பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பகுதிகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாத குடியிருப்பாளர்களும் சாலை மூடல் அறிவிக்கப்பட்டுள்ள டவுன்டவுன் பகுதிகளிலிருந்து முன்கூட்டியே வெளியேறுமாறும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
மூடப்படும் சாலைகளின் பட்டியல்
- ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டு: மாலை 4 மணி முதல் மூடப்படும்
- ஃபைனான்ஷியல் சென்டர் ஸ்ட்ரீட் சாலையின் கீழ் நிலை பாதை (Lower Level): மாலை 4 மணி முதல் மூடப்படும்
- அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்: மாலை 4 மணி முதல் மூடப்படும்
- புர்ஜ் கலிஃபா ஸ்ட்ரீட் : மாலை 4 மணி முதல் மூடப்படும்
- அல் அசயல் சாலை: மாலை 4 மணி முதல் மூடப்படும்
- அல் சுகுக் ஸ்ட்ரீட்: இரவு 8 மணி முதல் மூடப்படும்
- ஃபைனான்ஷியல் சென்டர் ஸ்ட்ரீட் சாலையின் மேல் நிலை பாதை (Upper Level): இரவு 9 மணி முதல் மூடப்படும்
- ஷேக் சையத் சாலை: இரவு 11 மணி முதல் படிப்படியாக மூடப்படும்
கூடுதல் பார்க்கிங்
புத்தாண்டு ஈவ்னிங் வானவேடிக்கை நிகழ்ச்சிகளைக் காண வருபவர்களுக்கு போதுமான வாகன நிறுத்துமிடம் இருப்பதை உறுதிசெய்ய, RTA ஆனது துபாய் மால், ஜபீல் மற்றும் எமார் பவுல்வர்டு ஆகிய இடங்களில் சுமார் 20,000 கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வாகனம் ஓட்ட விரும்புவோருக்கு, அல் வாஸ்ல் மற்றும் வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களின் பொது இயக்குநரகம் (GDRFA) வாகன நிறுத்துமிடங்களில் மாற்று வாகன நிறுத்துமிடங்கள் வழங்கப்படும், மேலும், அங்கு இலவச ஷட்டில் பேருந்துகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்டர்பாயிண்ட், எடிசலாட் E& போன்ற பார்க்கிங் கிடைக்கும் மெட்ரோ நிலையங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் துபாய் வாட்டர் கேனல் நடைபாதை பாலம் மற்றும் லிஃப்ட் ஆகியவையும் டிசம்பர் 31ம் தேதி மாலை 4 மணிக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டை வரவேற்க துபாய் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய கொண்டாட்ட இடங்களில் புர்ஜ் கலீஃபா, குளோபல் வில்லேஜ், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், அல் சீஃப், புளூவாட்டர்ஸ், ஜேபிஆரில் உள்ள பீச் மற்றும் ஹத்தா ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel