ஜனவரி 2 முதல் அமல்.. 9 உணவுப் பொருட்களின் விலை ஏற்றேத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அமீரகம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் (Ministry of Economy), வருகிற ஜனவரி 2, 2025 வியாழன் முதல், நாட்டில் விற்கப்படும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் மீதான தொடர்ச்சியான விலை உயர்வுகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஆறு மாத இடைவெளி விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அபுதாபியில் நேற்று டிசம்பர் 24ம் தேதி, செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பொருளாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விலைக் கொள்கை, நுகர்வோரைப் பாதுகாப்பதையும், நாடு முழுவதும் சந்தை ஸ்திரத்தன்மையைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாட்டில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் ஒன்பது அடிப்படை நுகர்வோர் பொருட்களின் விலையை முன் அனுமதியின்றி அதிகரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களில் சமையல் எண்ணெய், முட்டை, பால் பொருட்கள், அரிசி, சர்க்கரை, கோழி, பருப்பு வகைகள், ரொட்டி மற்றும் கோதுமை ஆகியவை அடங்கும்.
புதிய அமைச்சரவை ஆணைகளின்படி, பொருளாதார அமைச்சகம் உள்ளூர் அதிகாரிகள், அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் சப்ளையர்கள், சில்லறை விற்பனையாளர்கள், டிஜிட்டல் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களான பொதுமக்கள் ஆகியோர் புதிய கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரும் இந்ர முடிவுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வதை மேற்பார்வையிட அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களிலும் அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விநியோகம் மற்றும் தேவையை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த புதிய கொள்கை மற்றும் அதன் ஒழுங்குபடுத்தும் முடிவுகள், எதிர்பாராத சூழ்நிலைகள் அல்லது வெளிப்புற பொருளாதார மாற்றங்களால் ஏற்படும் திடீர் விலை உயர்வுகளில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், சில நுகர்வோர் பொருட்களின் யூனிட் விலையில் கவனம் செலுத்தும் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அமைச்சரவை முடிவு எண். 245 ஆனது, பொருட்களின் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் பல்வேறு மாற்றுகளுக்கு இடையே பயனுள்ள ஒப்பீடுகளை இது அனுமதிக்கும் என கூறப்படுகிறது.
எனவே தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் பயனர்களுக்கு உதவ இது துல்லியமான தகவலை நுகர்வோருக்கு வழங்கும். கூடுதலாக, தற்போது சந்தையில் உள்ள ஒட்டுமொத்த தள்ளுபடி விலைகளை மட்டுமல்லாமல், அதன் ஒரிஜினல் யூனிட் விலையையும் குறிப்பிடும்போது நுகர்வோருக்கு சரியானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் இது வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொருளாதார அமைச்சகத்தின் துணைச் செயலாளர் அப்துல்லா அஹ்மத் அல் சலேஹ் கூறுகையில், இந்த ஒன்பது அடிப்படை நுகர்வோர் பொருட்களுக்கு கூடுதலாக, இந்த பொருட்களில் சில தொடர்புடைய பொருட்களும், சுத்தம் செய்யும் பொருட்களுக்கான விலைகளும் அடங்கும், அவை அமைச்சகத்தின் முன் அனுமதியுடன் மட்டுமே உயர்த்தப்படும், இருப்பினும், இவை நாட்டின் சந்தைகளில் மீதமுள்ள பொருட்களின் சப்ளை மற்றும் தேவை மற்றும் பிற சந்தை வழிமுறைகள் தொடர்பான விதிகளுக்கு உட்பட்டவை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், அமைச்சரவை தீர்மான எண். 246, இந்தப் பொருட்களுக்கான விலைகளின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதையும், தன்னிச்சையாக விலை அதிகரிப்பதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தயாரிப்பு தரத்தை பராமரிப்பதால் சமூகத்தின் நல்வாழ்வில் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் இது தடுக்கும் என்றும், இந்த முயற்சி சப்ளையர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களிடையே சமநிலையை ஏற்படுத்தவும் முயல்கிறது என்றும் அல் சாலே கூறியுள்ளார்.
2025 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய மாற்றங்கள், மூன்று புதிய அமைச்சரவை ஆணைகளின் கீழ் வரும் அடிப்படை நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஒழுங்குமுறை முடிவுகளுக்கான புதிய விலைக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இதற்கு முன்பாக அமீரகத்தில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் கண்காணிக்கும் வகையில் விலை நிர்ணயக் கொள்கை (pricing policy) அறிமுகப்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக நுகர்வோர்களாகிய பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யவும் இந்த புதிய விலைக் கொள்கை அனுமதிக்கிறது. இந்த வழிகாட்டுதல் அனைத்து சப்ளையர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel