அமீரக செய்திகள்

துபாய்: ‘அல் மம்சார் பீச்’ திட்டத்தின் முதல் கட்டம் நிறைவு.. மிதக்கும் பாலம் முதல் பல புதிய அம்சங்கள் சேர்ப்பு..!!

துபாயில் உள்ள அல் மம்சார் கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டம் கிட்டத்தட்ட பாதி நிறைவடைந்த நிலையில், துபாய் முனிசிபாலிட்டி இப்போது இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது, இது அல் மம்சார் கார்னிச்சில் கடற்கரையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த திட்டமானது புதுமையான வடிவமைப்புகள் மூலம் க்ரீக் மற்றும் கார்னிச் ஆகியவற்றை தடையின்றி இணைக்கும் வகையில் புதிய கடற்கரை சுற்றுலா தலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் இரண்டு கட்டங்களும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 400 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 125,000 சதுர மீட்டர் பரப்பளவில் 80 மீட்டர் அகலத்தில் பரவியுள்ள அல் மம்சார் கார்னிச் கடற்கரை, இரவு நீச்சல் வசதிகள், ஸ்போர்ட்ஸ் க்ளப், குழந்தைகள் விளையாடும் பகுதிகள் மற்றும் ஓடுதல், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றுக்கான பாதைகள் கொண்ட பெண்களுக்கான பிரத்யேக பொது கடற்கரை என கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.

புதுமையான வடிவமைப்பு

அல் மம்ஸார் க்ரீக் பீச் மற்றும் அல் மம்சார் பூங்காவை இணைக்கும் ஓடுதல், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதைகளின் புதுமையான வடிவமைப்பு, இப்பகுதியில் இதுவே முதல் முறையாகும், இது பூங்கா பகுதிகளுடன் கடற்கரை பாதைகளை இணைக்கிறது. இவை அழகிய இயற்கையை ரசிப்பதற்கான மிக உயர்ந்த தரத்திற்கு வடிவமைக்கப்பட்ட பசுமையான இடங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மற்ற வசதிகளில் பருவகால நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான 5,000 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 2,000-சதுர-மீட்டர் ஸ்கேட்போர்டிங் பகுதி ஆகியவை அடங்கும். கூடுதலாக, AI-ஆதரவு கொண்ட கண்காணிப்பு அமைப்புகள், நீரில் மூழ்கும் மீட்பு தொழில்நுட்பங்கள், கூட்ட மேலாண்மை கருவிகள் மற்றும் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் சேவைகளும் இந்த இடத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் பொது வசதிகள் ஏஜென்சியின் CEO படேர் அன்வாஹி அவர்கள் கூறுகையில், துபாயின் எதிர்கால லட்சியங்களுடன் இணைந்த புதுமையான, நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

முதல் கட்டம்

துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள தகவலின் படி, இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு 45 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 275,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட கடற்கரை பல்வேறு இடங்களில் 30 மீட்டர் முதல் 90 மீட்டர் வரை அகலம் கொண்டது.

இந்த திட்டத்தில் கிரீக்கின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 200 மீட்டர் நீளமுள்ள பாதசாரி மிதக்கும் பாலம், பொதுமக்களின் அணுகலை எளிதாக்குகிறது. மேலும், 300 மீட்டர் நீளமுள்ள இரவு நீச்சல் கடற்கரையும், மாற்றுத்திறநாளி மக்கள் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 5-கிலோமீட்டர் நடைபாதை மற்றும் கடற்கரையில் பிரத்யேக ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் தடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!