அமீரக செய்திகள்

துபாய்: ஜனவரி 31 முதல் அமலுக்கு வரும் புதிய சாலிக் கட்டணம்.!! ரமலான் மாதத்திற்கான கட்டணங்களும் வெளியீடு.!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நகரத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து டோல் கேட்களிலும் மாறுபட்ட சாலிக் கட்டண முறையை (variable road toll pricing) செயல்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், சாலிக் நிறுவனம் ஜனவரி 31 முதல் புதிய மாறுபட்ட சாலை சுங்க கட்டண முறை நடைமுறைக்கு வரும் என்று வெள்ளிக்கிழமை DFM-பட்டியலில் அறிவித்துள்ளது.

மேலும், புதிய கட்டணங்கள், பீக் ஹவர் நேரம் (peak hour time) மற்றும் துபாயில் சாலிக் டோல் கேட் அமைந்துள்ள இடங்கள் ஆகிய முழுவிபரங்களையும் RTA வெளியிட்டுள்ளது. RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வார நாட்களில், போக்குவரத்து அதிகமுள்ள காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டோல் கட்டணம் 6 திர்ஹம்ஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகன நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில், அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் சாலிக் கேட் வழியாக பயணிப்பதற்கான கட்டணம் 4 திர்ஹம்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், பொது விடுமுறைகள், சிறப்பு நிகழ்வுகள் அல்லது முக்கிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் கட்டணம் 4 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் போது கட்டணங்கள் மற்றும் நேரங்கள்

சாலிக் நிறுவனம், புனித ரமலான் மாதத்திற்கான அதன் மாறக்கூடிய விலை நேரங்களையும் கட்டணங்களையும்  பட்டியலிட்டுள்ளது. அதன்படி, சாதாரண நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாலிக் விலை 6 திர்ஹம்களாக இருக்கும். நெரிசல் இல்லாத நேரங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் 4 திர்ஹம்ஸ் ஆகக் குறையும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில், பொது விடுமுறைகள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர, பீக் ஹவர் கட்டணங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) 4 திர்ஹம்ஸ் ஆகவும், நெரிசல் இல்லாத நேரங்கள் (காலை 7 முதல் 9 மணி வரை மற்றும் காலை 2 மணி முதல் 7 மணி வரை) 4 திர்ஹம்ஸ் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வார இறுதி நாட்கள் மற்றும் வார நாட்களில் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட பார்க்கிங் கட்டணக் கொள்கை

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த ஆண்டு நவம்பரில் மாறுபட்ட சாலை கட்டண விலை மற்றும் மாறுபடும் பார்க்கிங் கட்டணக் கொள்கைகளுக்கான திட்டங்களை அறிவித்தது. இந்த முயற்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளுக்கான ‘நெரிசல் விலைக் கொள்கை’ எனும் புதிய முறையும் அடங்கும்.

அதன்படி, முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் மண்டலங்களுக்கு அருகில் பொது கட்டண பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 25 திர்ஹம்ஸ் கட்டணம் அறிமுகப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கொள்கை ஆரம்பத்தில் துபாய் உலக வர்த்தக மையத்தில் (Dubai World Trade Center) நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது பிப்ரவரி 2025 இல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவுப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!