UAE: சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு..!! இந்த ஆண்டுக்குள் 26 திர்ஹம்ஸிற்கு கீழே செல்ல வாய்ப்பு..!!

சமீப வாரங்களில் இந்திய ரூபாய் மதிப்பானது வரலாறு காணாத அளவிற்கு சரிந்து, ஒரு திர்ஹாமிற்கு 23.689 என்றும் அமெரிக்க டாலருக்கு 85.97 என்ற இலக்கையும் தொட்டது. அதிலும் கடந்த ஜனவரி 10 அன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 86.04 ஆக வீழ்ந்து குறைந்த மதிப்பில் புதிய அளவையும் தொட்டது. இந்நிலையில் UAE திர்ஹமிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டுக்குள் 26-க்கும் கீழே சரிவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் புதிய ஆளுநர் சஞ்சய் மால்ஹோத்ராவின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி டாலருக்கு எதிரான தன்னிச்சையான கட்டுப்பாட்டை தளர்த்த முடிவெடுக்கப் போவதால் இது ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சரிவுக்கு பங்கு முதலீட்டாளர்களின் வெளியேற்றம், எண்ணெய் இறக்குமதியாளர்களின் வலுவான டாலர் தேவை, கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க பொருளாதார வீதங்களின் ஏற்றம் போன்றவை முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.
இந்த சரிவு இந்தியாவின் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரிய சவாலாக இருக்கலாம் எனவும், குறிப்பாக எண்ணெய் விலைகள் மேலும் உயர்ந்தால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஆனால், இந்த சரிவு நீண்ட காலத்தில் வணிக சமநிலையை ஏற்படுத்துவதற்கும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் உதவலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்திற்கு அனுப்புவதால் அதிக ரூபாயைப் பெறுவார்கள். அதே வேளையில், டாலருக்கு எதிராக ரூபாய் 95 வரை சரிவதற்கான வாய்ப்பு இருப்பதால், இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ரிசர்வ் வங்கி மிகவும் நெகிழ்வான மாற்று விகித ஆட்சியைக் கடைப்பிடிப்பதால், சில நிபுணர்கள் ரூபாயின் மதிப்பு மேலும் 10% வரை சரிவதற்கான சாத்தியத்தை எதிர்பார்க்கின்றனர். இது ஏற்றுமதிக்கு உதவினாலும், இறக்குமதிகள் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று விகிதத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், நாணய ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி சந்தை அழுத்தங்களை சமாளிக்க அதன் வெளிநாட்டு நாணய கையிருப்புகளை பயன்படுத்தியதாகவும், ஆனால் தற்போது இவை குறைந்துவிட்டதால் ரூபாயின் நிலையை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மொத்தத்தில், இந்த பணமதிப்பு மாற்றங்கள் இந்திய பொருளாதாரத்திற்கும் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கும் கலவையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், இது ஒருவேளை நீண்ட காலத்தில் ஏற்றுமதிக்கு ஒத்துழைக்கலாம், ஆனால் இந்தியாவில் வசிப்பவர்கள் மதிப்பிழப்பின் எதிர்மறை விளைவுகளை சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதையும் நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel