அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

அனைத்து விமான நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகளை அறிவித்த இந்தியா..!! ஏப்ரல் 1 முதல் அமல்.. UAE பயணிகளுக்கு பொருந்துமா???

இந்தியாவில் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs- CBIC), வருகின்ற ஏப்ரல் 1, 2025 முதல், இந்தியாவிற்கு மற்றும் இந்தியாவிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகள் குறித்த விரிவான தகவல்களை இந்திய அரசாங்கத்தின் சுங்கத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.

மேலும், இந்த விதிகளுக்கு இணங்கத் தவறினால் இந்திய மதிப்பில் 25,000 ருபாய் முதல் 50,000 ருபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி இடர் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில்  வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8, 2022 அன்று வெளியிடப்பட்ட ‘பயணிகள் பெயர் பதிவு தகவல் ஒழங்குமுறைகள், 2022’ இன் கீழ், விமான நிறுவனங்கள் ஜனவரி 10, 2025க்குள் தேசிய சுங்க இலக்கு மையத்தில் (National Customs Targeting Centre-Passenger- NCTC-Pax) பதிவு செய்ய வேண்டும். இந்த விதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் உட்பட, இந்தியாவிற்கு மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சர்வதேச விமானங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்பதையும், CBIC தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இதில் ட்ரான்ஸிட் பயணிகளும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விவரங்கள் பகிரப்படும்?

ஒரு சர்வதேச விமானம் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன், மொபைல் எண் மற்றும் கட்டண முறை முதல் பயணத் திட்டம் வரையிலான விவரங்களை சுங்க அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒவ்வொரு விமான ஆபரேட்டரும், புறப்படும் நேரத்திற்கு 24 நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது புறப்படும் நேரத்திலோ பயணிகளின் பெயர் பதிவு தகவலை வழங்க வேண்டும் என்று CBIC வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

CBIC வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, விமான நிறுவனங்கள் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சர்வதேச விமானங்களுக்கு பின்வரும் தகவலைப் பகிர வேண்டும். அதாவது பயணிகளின் பெயர், பில்லிங்/பணம் செலுத்தும் தகவல் (கிரெடிட் கார்டு எண்), டிக்கெட் வழங்கிய தேதி, உத்தேசித்த பயணம், அதே PNRல் உள்ள மற்ற பயணிகளின் பெயர்கள் மற்றும் PNRக்கான பயணத் திட்டம்.

மேலும், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற தொடர்பு விவரங்களுக்கு கூடுதலாக, பயண ஏஜென்சி விவரங்கள், லக்கேஜ் தகவல் மற்றும் குறியீட்டு பகிர்வு தகவல்களையும் (ஒரு விமான நிறுவனம் மற்றொரு விமான நிறுவனத்தின் இருக்கைகளை விற்கும் போது) NCTC-Pax உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படும்?

புதிய விதிமுறைகள், பெயர்கள், தொடர்பு விவரங்கள் மற்றும் பயணத் திட்டங்கள் போன்ற தரவைப் பாதுகாப்பாகக் கையாள்வதன் மூலம் பயணிகளின் தனியுரிமையை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மேலும், இனம், மதம், அரசியல் பார்வைகள் மற்றும் சுகாதார விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களைச் செயலாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் பாதுகாப்பாக கையாளப்படுவதை NCTC-Pax மேற்பார்வையிடும். அதிகாரத்தால்  அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும் என்பதால், வலுவான தனியுரிமை நடவடிக்கைகள் உள்ளன.

இவ்வாறு சேகரிக்கப்படும் பயணிகளின் தரவு 5 ஆண்டுகள் வரை சேமிக்கப்படும். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான விபரங்களுக்கு தேவைப்படாவிட்டால் பதிவுகளை திறந்து பார்க்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!