அமீரக செய்திகள்

‘1 திர்ஹமிற்கு நெய்’.. பெரியளவில் பணத்தை இழந்த மக்கள்.. 90% வியாபாரத்தை இழந்த நிறுவனம்.. நடந்தது என்ன..??

அமீரகத்தில் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் ஆன்லைன் மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகள் அவ்வப்போது எச்சரித்து வந்தாலும், மோசடி செய்பவர்கள் தொடர்ந்து குடியிருப்பாளர்களை குறிவைத்து மோசடி செய்து கொண்டே இருக்கின்றனர். போலி வலைத்தளங்கள், லோகோக்களைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களை குறி வைத்து நடத்தப்படும் மோசடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வணிகங்களும் பிராண்டுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு மக்களை ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் தளங்களையும் தொழில்நுட்பத்தையும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்த மோசடி சம்பவத்தை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

மோசடி கும்பல் அமீரகத்தைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘Simply The Great Food’ என்ற நிறுவனத்தின் லோகோ மற்றும் தயாரிப்பு படங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான திர்ஹம்ஸை ஏமாற்றியதன் காரணமாக, அந்நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் நற்பெயருக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதுடன் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

இது குறித்து சிம்ப்ளி தி கிரேட் ஃபுட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெஹ்ரோஸ் ராமய் பேசுகையில், சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, மோசடி கும்பல் ‘A2 Desi Ghee’ நிறுவனத்தின் லோகோ மற்றும் தயாரிப்பு படங்களை நகலெடுத்து, போலி வலைத்தளங்களை உருவாக்கி ஃபேஸ்புக், டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வெறும் 1 திர்ஹம்ஸிற்கு நெய் என்ற சலுகையை ஊக்குவித்ததைக் கவனித்ததாகவும், அவை சிம்ப்ளி தி கிரேட் ஃபுட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு மிகவும் ஒத்ததாக இருந்தன என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த ப்ரொமோஷன்களை இயக்கிய மோசடிக் காரர்கள், ஒரு கணக்கெடுப்பை நிரப்புவதன் மூலம், 1 திர்ஹம்ஸ்க்கு பொருளை வாங்கவும் மக்களை ஊக்குவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “உள்ளூர் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பணம் செலுத்துவதற்காக நாங்கள் தினசரி விற்பனையை சார்ந்து இருக்கிறோம்” என்று கூறிய ஷெரோஸ் மோசடிகள் தொடங்கியதிலிருந்து, நிறுவனத்தின் விற்பனை வியத்தகு முறையில் 90%வரை சரிந்து விட்டதாகவும், தற்போது  நிறுவனம் பணப்புழக்கம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற போராடி வருகின்றது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

பணத்தை பறிகொடுத்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

இந்த மோசடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில நபர்களின் விபரங்கள் இங்கே:

  • ஒரு பெண் துபாயில் தனது முதல் சொத்தில் வைப்புத்தொகையாகச் வைத்திருந்த 100,000 திர்ஹம்ஸை இழந்திருக்கிறார்.
  • துபாய் குடியிருப்பாளர் தர்மேஷ் பரத்வாஜ், தூய நெய் பாட்டிலுக்கு நம்பமுடியாத 1 திர்ஹம்ஸ் சலுகையைப் பெற முயன்றபோது 18,000 திர்ஹம்ஸை பறிகொடுத்திருக்கிறார்.
  • 16 ஆண்டுகளாக அமீரகத்தில் வசிக்கும் தினேஷ் 5,030 திர்ஹம்ஸை இழந்திருக்கிறார்.
  • டாக்ஸி ஓட்டுனரான மஜித், தனது திருமணப் பயணத்திற்கு பாகிஸ்தானுக்கு செல்வதற்காக சேமித்து வைத்திருந்த 1,200 திர்ஹம்ஸ் பணத்தை இழந்ததாக புகாரளித்துள்ளர்.

எவ்வாறு ஏமாற்றப்பட்டனர்?

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்ட போது, அவர் ஃபேஸ்புக்கில் போலி சலுகையைப் பார்த்து, தூய நெய்யை ஆர்டர் செய்ய கொடுக்கப்பட்ட லிங்க் ஒன்றை கிளிக் செய்துள்ளார். அந்த இணைப்பு அவரை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது, அங்கு ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்கும்படி கேட்கப்பட்டிருக்கிறார். அடுத்ததாக, அவரது வங்கி கார்டு விவரங்களை நிரப்புமாறு கோரிய வேறு தளத்திற்கு திருப்பி விடப்பட்டிருக்கிறார்.

அதையடுத்து, வங்கியில் இருந்து ஒரு OTP ஐப் பெற்ற பிறகு, பரிவர்த்தனை தோல்வியடைந்ததால், அவர் வலைத்தளத்தை மூடியுள்ளார். பின்னர், எந்தவொரு OTP கோரிக்கையும் இல்லாமல் 5,030 திர்ஹம்ஸ் தனது கார்டில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார். ஏனெனில் மோசடி செய்பவர்கள் தினேஷின் ஐடியை அவர்களின் ‘ஆப்பிள் பே’ உடன் இணைத்துள்ளனர். இவரைப் போலவே, பலர் 1 திர்ஹம்ஸ் சலுகையின் மூலம் நெய் வாங்க முயற்சித்து ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மோசடியின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம்:

மோசடிக்காரர்கள் ஆப்பிள் பே, வாட்ஸ்அப் மற்றும் கூகிள் பே போன்ற அப்ளிகேஷன்களில் மால்வேர்களை நிறுவ செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (Machine Language- ML) ஆகியவற்றைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் பெரும்பாலும் பிக்ஸ்பைரேட் போன்ற அதிநவீன மால்வேர்களைப்  பயன்படுத்துகின்றனர், இதன் மூலம் தொடர்புகள் மற்றும் வங்கி விவரங்களை அணுகவும், இரண்டு காரணி அங்கீகாரம் (two-factor authentication) போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து, முக்கியமான தகவல்களைத் திருடவும், மற்றும் ஆப்ஸ்களை கையாளவும் முடியும் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தது என்ன?

இந்த பாரிய மோசடிகளைத் தொடர்ந்து, ஷெஹ்ரோஸும் அவரது குழுவும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற குழுக்கள் மூலம் இது குறித்து எச்சரித்து வருகின்றனர். சில போலி வலைத்தளங்களை அதிகாரிகள் மூடிவிட்டாலும், மோசடி செய்பவர்கள் புதியவற்றை உருவாக்குகிறார்கள். இது போன்ற மோசடிகள் கே.எஃப்.சி மற்றும் அல் பேக் போன்ற பெரிய பிராண்டுகளை கூட பாதித்துள்ளன என்று ஷெஹ்ரோஸ் வலியுறுத்தினார்.

நிறுவனம் இன்னும் நிதி இழப்பிலிருந்து மீண்டு அதன் சேதமடைந்த நற்பெயரை சரிசெய்ய முயற்சித்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக கடின உழைப்பு மூலம், பிராண்டைக் கட்டியெழுப்பிய போதிலும், இந்த மோசடி தனது நிறுவனத்தின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது என்று ஷெஹ்ரோஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!