அமீரகக் குடியிருப்பாளர்கள் ஈகைத் திருநாளான ஈத் அல் ஃபித்ரின் விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். ஈத் விடுமுறையில் குடியிருப்பாளர்களின் வசதிக்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இயக்க நேரம் போன்ற பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.
அதேபோல், துபாய் மற்றும் அபுதாபி இடையேயான இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்களிலும் தற்காலிக மாற்றங்களை அறிவித்திருந்தது. RTA வின் படி, துபாய் சிட்டியின் மையப்பகுதியில் இருந்து அபுதாபி செல்லக்கூடிய பேருந்துகள் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 1, 2025 வரை இப்னு பதூதாவிலிருந்து புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஈத் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று ஏப்ரல் 2, 2025 முதல் மீண்டும் வழக்கமான பேருந்து அட்டவணைகள் பின்பற்றப்படும் என RTA தெரிவித்துள்ளது. விடுமுறை காலங்களில் துபாய் மற்றும் அபுதாபி இடையே அதிகளவிலான பயணிகள் பயணிப்பதால், சிட்டியின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கையை RTA மேற்கொண்டு வருகிறது.
இது தவிர, ஈத் பண்டிகையின் போது நகரில் பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பதால், துபாய் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி வாகன ஓட்டிகள் நெரிசலை எதிர்பார்க்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதாவது விமான நிலைய சாலை, ரஷிதியா சாலை, விமான நிலையத்தின் புறப்பாடு நிலையம் (departure hall) ஆகிய பகுதிகளில் நெரிசல் இருக்கலாம் என குடியிருப்பாளர்களை RTA அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel